அடடே.. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 1 வருடம் பேறுகால விடுப்பு- பாமக தேர்தல் அறிக்கை
சென்னை: தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும் என்று பாமக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாமக தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்கள் நலன் பற்றி கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும்.
40 வயதைக் கடந்த அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என குடும்பத் தலைவிகள் விரும்பிய இடங்களில் இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
காவல்துறையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும். 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளாகக் கருதப்படும் வகையில், தமிழக அரசு சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும். குழந்தைகளுக்கான கொள்கை மற்றும் செயல்திட்டம் வெளியிடப்படும்.
பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தமிழக அரசுத் திட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காகச் செலவிடப்படும் நிதியின் அளவு 23.43% என்ற அளவில் இருந்து குழந்தைகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப 39% ஆக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். திருநங்கையர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பு மூலம் உறுதி செய்த பிறகு, இடஒதுக்கீட்டின் அளவு தீர்மானிக்கப்படும்.