தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு?.. நாளை முதல் ஸ்டிரைக்.. பால் உற்பத்தியாளர்கள் அதிரடி
அமைச்சர் சா.மு.நாசருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்
சென்னை: ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.7 ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று அவர்களுடன் துறை அமைச்சர் சா.மு.நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்கிற அச்சம் மேலெழுந்துள்ளது.
பால்வளத்துறையில் ஏகப்பட்ட முறைக்கேடு நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், எதிர்க்கட்சியினரும் ஆவின் பால் கொள்முதலில் தில்லு முல்லு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி அறிக்கை விட தொடங்கின. இந்த முறைகேடு காரணமாக தமிழ்நாட்டில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே மக்கள் தனியார் பாலை வாங்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் விமர்சித்திருந்தார்.

பால் உற்பத்தியாளர்கள்
இந்த பிரச்னை ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.7 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். ஆனால் இது தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் வேறு வழியின்றி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயாராகினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வரை நாளொன்றுக்கு 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் கொள்முதல்
இதற்கு அரசு கொடுக்கும் குறைந்த தொகைதான் காரணம். எனவே இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆவினில் இவ்வளவு குறைவாக கொள்முதல் செய்யப்படும் நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் சுமார் 2.57 கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆவின் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.32, எருமை பாலுக்கு ரூ.42 வழங்குகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42-45, எருமை பாலுக்கு ரூ.65 என கொடுக்கின்றனர். எனவே நாங்கள் தனியார் நிறுவனத்தை நோக்கியே நகர்கின்றோம். இந்நிலையை மாற்ற அரசு 7 ரூபாய் ஊக்கத்தொகையை அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
இது தொடர்பாக இன்று சென்னையில் பால் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைக்கு முன்னதாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனையும் மேற்கொண்டார். இருப்பினும் இதற்கடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். எனவே நாளை முதல் திட்டமிட்டபடி பால் விநியோக நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் நாளை முதல் விநியோகிக்க மாட்டோம் என்றும் எனவே சுமார் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் தடைபடும் என்றும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள்,
ஆவின் பால் நிறுவனமானது தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிங்கள் மற்றும் கடைசியாக இணையம் என மூன்று அடுக்குகளாக செயல்படுகிறது. இதில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்கின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9,376 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கை தனியார் வசம் கிடையாது. ஆனால் இப்படி இருந்தும் குறைவான அளவில், குறைவான விலையில் பால் கொள்முதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சங்கத்தின் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்னர்.












Click it and Unblock the Notifications