B.1.1.7 வைரஸ்.. இந்தியாவில் அதிகமாக பரவும் "யு.கே" ரக கொரோனா வைரஸ்.. ஆபத்தானதா? - பின்னணி என்ன?
சென்னை: இந்தியாவில் பரவி வரும் பிரிட்டனை சேர்ந்த B.1.1.7 வகை கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பரவும் இந்த கொரோனா வகை குறித்து தெரிந்து கொள்ளும் முன் கொரோனா மியூட்டேஷன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை சொம்புல தண்ணீர் வேணும்னு கேட்டார் என்று வடிவேல் படத்தில் வரும் காமெடியை போன்றதுதான் வைரஸ் மியூட்டேஷனும்.. வடிவேல் தண்ணீர் கேட்க.. அதை ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி சொல்லி.. கடைசியில் மாப்பிள்ளை வெள்ளி சொம்பு கேட்டார் என்று திரிந்துவிடும். கொரோனா மியூட்டேஷன் என்பதும் இப்படிப்பட்டதுதான்.
கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் போது லேசாக மாற்றம் அடைவதுதான் மியூட்டேஷன். அதாவது ஏ என்ற நபருக்கு கொரோனா ஏற்பட்டு அது பி என்ற நபருக்கு மாறும் போது கொஞ்சம் வேறுபட்டு இருக்கும்.
மாறும்
அமெரிக்காவில் இருந்து ஒருவர் இங்கே வரும்போது அவர் அமெரிக்க வகை கொரோனா வைரஸை கொண்டு வந்தாலும் இந்தியாவிற்குள் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க இப்படி பல பகுதிகளில் மியூட்டேஷன் ஆகியுள்ளது. தற்போது வரை கணக்கில் அடங்காத அளவிற்கு இந்த கொரோனா வைரஸ் மியூட்டேஷன் ஆகியுள்ளது.
மியூட்டேஷன்
இப்போதெல்லாம் வுஹன் வகை வரை இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. மாறாக அமெரிக்க வகை கொரோனா , ரஷ்ய வகை கொரோனா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பரவிய கொரோனா வகைதான் இந்தியாவில் அதிகம் பரவி உள்ளது. கொரோனா வைரஸில் நிறைய வகைகள் உருவாகி இருந்தாலும் 6-8 வகைகள் மூலம்தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள்
இந்த நிலையில்தான் இந்தியாவில் பிரிட்டன் வகை கொரோனா பரவி வருகிறது. பிரிட்டனில் வேகமாக பரவிய கொரோனாவின் வகையாகும் இது. இதை B.1.1.7 வகை கொரோனா என்பார்கள். இந்த B.1.1.7 அதிக ஆபத்தானது. இதன் புரோட்டின் ஸ்பைக் மிகவும் வலிமையானது. வேகமாக பரவ கூடியது. அதோடு மிக முக்கியமாக கொரோனா வேக்சின்களால் அவ்வளவு எளிதாக இதை கட்டுப்படுத்த முடியாது.
எச்சரிக்கை
இதனால் அப்போதே இந்த B.1.1.7 வகை வைரஸ் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்தியாவில் தற்போது வரை 736 பேர் இந்த புதிய வகை வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த B.1.1.7 கொரோனா மூலம் பஞ்சாப்பில் மட்டும் 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இவர்களுக்கு இடையில் B.1.1.7 கொரோனா வகை மிக வேகமாக பரவி உள்ளது.
ஆராய்ச்சி
இந்தியாவில் வேகமாக பரவி வரும் பிரிட்டனை சேர்ந்த B.1.1.7 வகை கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையம் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. சிரியன் எலிகளை வைத்து சோதனை சாவடியில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. 18 எலிகளை வைத்து சோதனை செய்துள்ளனர். இதில் இந்தியாவில் பரவி வரும் பழைய D614G வகை கொரோனாவை 9 எலிகளுக்கும், புதிய B.1.1.7 வகையை இன்னொரு 9 எலிகளுக்கும் கொடுத்துள்ளனர்.
எலிகள்
இந்த எலிகளுடன் மற்ற கொரோனா இல்லாத எலிகளை தங்கவிட்டு எந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. எது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சோதனை செய்துள்ளனர். இதில் இரண்டு வகையும் ஒரே வேகத்தில் பரவி உள்ளது. இரண்டும் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் வகையை சேர்ந்த B.1.1.7 கொரோனா வைரஸ் ஒன்றும் உடல் ரீதியாக அதிக பாதிப்பை எல்லாம் ஏற்படுத்தவில்லை.
முடிவு
இரண்டுக்கும் ஒரே திறன்தான். இதனால் பிரிட்டன் வகை வைரஸ் கூடுதல் பாதிப்பு கொண்டது இல்லை. இதுவும் ஒருவருடமாக இந்தியாவில் பரவும் அதே பழைய வகையின் திறன் கொண்டதுதான். இதற்கு கூடுதல் திறனும் இல்லை, குறைவான திறனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் பரவும் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதாக ஆராய்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.