நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட 2 கலெக்டர்களுக்கு விருது.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த மாவட்ட கலெக்டர்களாக நீலகிரி மற்றும் சிவகங்கை கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொருட்டு கடந்த மாதம் 8-ம் தேதி தேர்வுக் குழுவின் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

விருதுகளுக்கென பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது பின்வரும் நபர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்து
அரசு அவ்வாறே ஆணையிடுகிறது:-
அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர்களாக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கு திருச்சியைச் சேர்ந்த ஹோலி கிராஸ் சர்விஸ் சொசைட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த மருத்துவர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications