திருப்பதி-சென்னை சென்ட்ரல் , மதுரை-செங்கோட்டை.. பல ரயில்களின் எண்கள் மாறுது.. ரயில்வே அறிவிப்பு
சென்னை: திருப்பதி-சென்னை சென்ட்ரல் , மதுரை-செங்கோட்டை உள்பட தெற்கு ரயில்வேயில் இயங்கும் 296 முன்பதிவில்லா ரயில்களின் எண்கள் ஜூலை 1-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இந்த புதிய எண்கள் 5, 6, 7 ஆகிய எண்களில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகிள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவை கொரோனா பரவல் ஏற்பட்ட 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நிறுத்தப்பட்டிருந்து. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில் சேவைகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு முன் தெற்கு ரயில்வேயில் 5,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

கொரோனா கட்டுப்பாட்டின்போது நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவை, பின்னர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டு வந்தன. இதனால் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது. இதன் காரணமாக தினசரி பயணிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரயில்கள், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவத்தது. தற்போதைய நிலையில் மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய தூர சாதாரண கட்டண ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வகை ரயில்களுக்கு தற்காலிமாக, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 1 முதல் வழக்கமான பயணிகள் ரயிலாக இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த புதிய எண்கள் 5, 6, 7 ஆகிய எண்களில் தொடங்குகின்றன. பயணிகள் டிக்கெட் எடுக்கும்போது, அதில் புதிய எண்கள் இடம்பெறும் என்று ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் இருந்து அனைத்து கோட்டப் பொதுமேலாளருக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரயிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் எண்களும் '0’ வில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரயில்களின் எண்கள் ஜூலை 1ம் தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்படும். உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 06728 எனும் எண்ணுக்கு பதிலாக 66070 எனும் எண்ணிலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் 06504 எனும் எண்ணுக்கு பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications