தூள் கிளப்பும் மநீம பெண் வேட்பாளர்.. படாரென பிளானை மாற்றிய ஸ்டாலின்.. திமுகவை அசர வைத்த "ரிப்போர்ட்"
சென்னை: திமுக தனது தேர்தல் அறிக்கையில் திடீரென மூன்று விஷயங்களை சேர்த்து இருக்கிறது.. இத்தனை நாட்கள் அறிக்கை உருவாக்கிவிட்டு முக்கியமான மூன்று விஷயங்களை அந்த கட்சி மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 500க்கும் அதிகமான நலத்திட்டங்களுடன் மிகவும் சிறப்பான முறையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இந்த அறிக்கை பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, மக்களின் கோரிக்கைக்கு செவி மடுத்து, ஒரு மாதத்திற்கும் மேலாக திட்டங்களை வகுத்து இந்த அறிக்கையை திமுக தரப்பு மிகவும் சிறப்பாக வடிவமைத்து இருக்கிறது.
திமுக அறிக்கை
இந்த நிலையில் இத்தனை நாட்கள் அறிக்கை உருவாக்கிவிட்டு முக்கியமான மூன்று விஷயங்களை அந்த கட்சி மறந்துவிட்டது. மக்கள் அதிகம் எதிர்பார்த்த மூன்று முக்கியமான விஷயங்களை அந்த கட்சி அறிக்கையில் சேர்க்கவில்லை. இதையடுத்து திமுக அறிக்கையில் இன்று இது தொடர்பான மாற்றங்கள் செய்யப்பட்டன. 3 கோரிக்கைகளும் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டன.
சேர்ப்பு
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம், காட்டுப்பள்ளி துறைமுகம், சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆகிய மூன்றையும் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதையடுத்து இந்த மூன்று விஷயங்களுக்கு எதிரான வாக்குறுதியை இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது.
தேர்தல் அறிக்கை
அதன்படி முதல் விஷயமாக சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் இந்த திட்டத்திற்கு எதிராக பேசியது திமுகவிற்கு கை கொடுத்தது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கு எதிராக பேசியது திமுகவிற்கு பெரிய அளவில் கை கொடுத்தது. இதனால் இதே வாக்குறுதியை தமிழக சட்டசபை தேர்தலிலும் பயன்படுத்தும் முடிவில் திமுக இணைத்துள்ளது.
மறந்துவிட்டது
அதேபோல் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அறிக்கையில் சேர்க்க மறந்துவிட்டது. இந்த நிலையில் இன்று இந்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிரான வாக்குறுதி திமுக அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக பேசிய பத்மப்ரியா தற்போது மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வைரல்
இந்த வரைவு அறிக்கைக்கு எதிராக பேசிய பத்மப்ரியா தமிழகத்தில் டிரெண்ட் ஆனார். இந்த திட்டம் மக்களின் எதிர்ப்பை சந்தித்து உள்ளதால் இவரை மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அறிவித்துள்ளது. இவருக்கு வேகமாக உயர்ந்து வரும் ஆதரவை கண்டு திமுகவும் தற்போது சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிரான வாக்குறுதியை தனது அறிக்கையில் சேர்த்து உள்ளது.
முக்கியம்
இது போக மீனவர்களின் எதிர்ப்பை சந்தித்து இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்தை திமுக தனது அறிக்கையில் சேர்த்து உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் திமுக இதை கோரிக்கையாக வைத்துள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் திட்டங்கள் குறைவாக இருப்பதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது.
ரிப்போர்ட்
சமூக வலைத்தளங்களில் திமுகவின் அறிக்கைக்கு மக்கள் கொடுத்த கமெண்ட்களை வைத்து இந்த ரிப்போர்ட் சென்றுள்ளது. அதில்தான் இந்த மூன்று திட்டங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டை பார்த்த பின்புதான் திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் அறிக்கையில் இந்த 3 வாக்குறுதிகளையும் இணைத்துள்ளார் என்கிறார்கள் .