உச்சநீதிமன்ற உத்தரவு..கணக்கு தர மறுக்கும் தீட்சிதர்கள்.. ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் ஏமாற்றம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் கோவில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாக சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளுக்கு உரிய வரவு செலவு கணக்கு விபரங்களைத் தர தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் கோவில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளதால் ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள்
ஏமாற்றமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்கள் குறித்தும், கோவில், சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நேரடி விசாரணை நடத்தி நிர்வாக சீரமைப்பு குறித்து பரிந்துரை வழங்க இந்து சமய அறநிலையத் துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக சி.ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் அந்த குழு கோவிலில் ஆய்வு செய்ய உள்ளது. அதற்கான ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு கோவில் செயலருக்கு அறநிலையத்துறை கடிதம் எழுதி உள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதற்கு பதிலளித்து பொது தீட்சிதர்களின் செயலர் கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னிச்சையாக கோவில் ஆவணங்களை கேட்க முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட 2014 செப்டம்பர் 19ம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 236-ன்படி, 2014 ஜனவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தீட்சிதர்கள் தனி சமய பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டு எதிர்கால வழக்குகளிலும் மேற்கண்ட தீர்ப்பின் முடிவு இறுதியாக உள்ளது என்பதை இந்து சமய அறநிலையத் துறையே ஒப்புக் கொண்டுள்ளது.

தனி சமய சீர்மரபினர்
தீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என்று தீர்ப்பு முடிவு இறுதியாக்கப்பட்டுள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 107ன் கீழ் தீட்சிதர்கள் நிர்வாகம் அறநிலையத் துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்பது உறுதியாகிறது. நடராஜர் கோவில் நிலங்கள் 1976 மார்ச் 9ம் தேதியிட்ட அரசாணை எண்: 836ன் படி, தனி வட்டாட்சியர் கோவில் நிலங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் நடராஜர் கோவில் நிலங்களை பற்றி தனி வட்டாட்சியரிடம் தான் கேட்க வேண்டும்.

கோவில் நகைகள்
தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பதிவேடுகள் தங்கள் துறை கட்டுப்பாட்டில் 40 ஆண்டுகளாக உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களிலேயே இல்லை. முக்கிய கோவில்களான பழநி,மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை கோவில்களில் பதிவேடுகள் இல்லாமல் உள்ளது. நகைகள் பற்றிய விபரத்திற்கு தாங்கள் 2005ல் செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோவிலுக்கு தரப்படவில்லை.

சட்டப்பூர்வமான தணிக்கை
கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிதாக 17 ஆண்டுகளுக்கு பின் துவக்க முடியாது. கடந்த 2021 ஜூன் 7ம் தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி துறை தணிக்கை குழுவிற்கான விதிகள் சட்டப்படி செல்லாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்டப்பூர்வமான தணிக்கை மற்றும் ஆய்விற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். ஆனால், தங்களது சட்டப்பிரிவு 107ன் படி நீங்களே ஒப்புக்கொண்ட வகையில் தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோவில்களில், தன்னிச்சையாக ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் அதிகாரத்திற்கு வெளியில் உங்கள் துறை உள்ளது.

கைவிட வேண்டும்
அதனால், தங்களது ஆய்வு மற்றும் தணிக்கையை உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பாட்டு, கைவிடுமாறு கோருகிறோம். மேற்கண்ட அம்சங்கள் ஆணையருக்கு விரிவாக தெரிவிக்கப்பட்ட பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பல கோவில்களில் கால நிர்ணயம் செய்யாமல் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுவது சட்டப்படி செல்லாது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோவில்களில், முறைகேடுகளை சரி செய்யாமல் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் அரசியல் சாசனப்படி பாதுகாக்கப்பட்டு நிர்வாகம் செய்யும் தனி சமய பிரிவினரான தீட்சிதர்களின் நிர்வாகத்தை ஆய்வு செய்ய தார்மீக உரிமையில்லை.

நீதிமன்ற அவமதிப்பு
உச்ச நீதிமன்ற தீப்புகளை சரியாக புரிந்து கொள்ளாமல், தீர்ப்புகளை தவறாக மேற்கோள்காட்டி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது தவறு.உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தற்போது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் அரசாணையை திரும்ப பெறவும் மீண்டும் கோரப்படுகிறது. தவறினால், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

5 பேர் கொண்ட குழு
இதனையடுத்து நேற்றைய தினம் அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து தீட்சிதர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5 பேர் கொண்ட அறநிலையத்துறை விசாரணைக் குழுவினர், இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆய்வை தொடங்கியுள்ளனர். இணை ஆணையர்கள் லெட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன். மேலும் அறநிலையத்துறை கோயில் நிர்வாக வருவாய் அலுவலர் சுகுமார், துணை ஆணையர் அரவிந்தன் ஆகிய 5 பேர் கொண்ட குழு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பட்டு வஸ்திரம்
இந்த குழு கோயிலின் வரவு, செலவு கணக்குகளை அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது. தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தனர். முன்னதாக கனகசபை மீதேறி சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தீட்சிதர்கள் பட்டு வஸ்திரம் அளித்து மரியாதை செய்தனர்.

கணக்கு தர மறுப்பு
இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை அறநிலையத்துறையின் விசாரணைக்குழுவிடம் தர தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். சட்டத்திற்கு உட்பட்டு கோவில் நிர்வாகம் செயல்படுவதாகவும் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சேகர்பாபு நேற்று வந்து ஆலோசனை நடத்தி சமாதனம் செய்தும் அதனை ஏற்க மறுத்துள்ள தீட்சிதர்கள் வரவு செலவு கணக்கு நகை விபரங்களைத் தர மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications