ரூ.4 கோடி பறிமுதல் பஞ்சாயத்து..குறுக்கே வந்த முஸ்தபா? நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா? பரபர ட்விஸ்ட்
சென்னை: மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிமை கோரிய முஸ்தபாவின், பணம் இல்லை என சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரை உரிமை கோருமாறு அறிவுறுத்தியது யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமை கோரினார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஈரோட்டை சோ்ந்த ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவகம் நடத்தி வரும் முஸ்தபாவை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பினா். அதன்பேரில், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவா் விசாரணைக்கு ஆஜரானாா்.
இந்நிலையில் பணத்துக்கு உரிமை கோரிய முஸ்தபா, பொய் சொல்லி இருப்பதும் அது அவருடைய பணம் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. முஸ்தபாவின் வங்கி கணக்குகளை ஆராய்ந்த போது இவ்வளவு தொகை பரிமாற்றம் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கில் திடீர் திருப்பமாக முஸ்தபா பணத்திற்கு உரிமை கோருமாறு அறிவுறுத்திய நபர் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications