இளம் தலைமுறையினரிடம் திருக்குறள் சென்றடைய... ஊடகங்களுடன் இணையும் தமிழ் வளர்ச்சித் துறை!
சென்னை: இளம் தலைமுறையினரிடம் திருக்குறள் சென்றடைய ஊடகங்களுடன் இணைந்து பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொழில்துறையுடன் தமிழ் வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவலை கூறியுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

சிறப்புப் பரிசு
அரசின் அனைத்துச் செயற்பாடுகளும் முழுமையாகத் தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக (அலுவலகக் கோப்புகளில்) குறிப்புகள், வரைவுகள் தொடர்ந்து தமிழில் எழுதும் அரசுப் பணியாளர்களைத் தெரிவு செய்து மாவட்ட நிலை, உள்ளாட்சி நிலை, தன்னாட்சி நிலை, சார்நிலை ஆகிய வகைப்பாடுகளில் சிறந்து விளங்கும் பணியாளர்கள் தெரிவு செய்யப்பெற்று அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-, இரண்டாம் பரிசாக ரூ.2,000/-, மூன்றாம் பரிசாக ரூ.1,000/ எனப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெறுகின்றன.

கேடயம் பரிசு
ஆட்சிமொழிச் சட்டத்தின் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் அலுவலகச் செயற்பாடுகள் முழுமையாக தமிழில் நடத்திவரும் அலுவலகங்களில் தலைமைச்செயலக அலுவலகம், துறைத் தலைமை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றின் துறைத் தலைமை அலுவலகங்கள் என்ற வகைப்பாட்டின்கீழ் தெரிவுசெய்து ஒவ்வொரு ஆண்டும் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறுகின்றன.

தாய் மொழி நாள்
ஐக்கிய நாட்டுக் கல்வி மற்றும் கலைப் பண்பாட்டு அவையின் சார்பில் பிப்ரவரித் திங்கள் 21ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்க அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் உலகத் தாய்மொழி நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என முழங்கிய புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் நாளைப் போற்றும் வகையில் தமிழ்க் கவிஞர் நாளாக, தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீராக் காதல் திருக்குறள்
"தீராக் காதல் திருக்குறள்" என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாகத் திருக்குறள் இன்றைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் தொலைக்காட்சிகளுடன் இணைந்தும் இணைய வடிவிலும் அசைவூட்டும் படங்கள், வினாடி வினா, குறும்படங்கள், நடனம் போன்ற கலை வடிவங்களோடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications