வாக்குத் தோட்டாக்களால் தவிடு பொடி.. விசிக அபார வெற்றி.. பூரித்து சொன்ன திருமாவளவன்
சென்னை : 3 மாவட்டக் குழுவில் 4 இடங்களில் மட்டுமே விசிக போட்டியிட்டது. அவற்றில் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 75% வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது
இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நீட் விலக்கு.. தமிழக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
5 பதவியிடங்கள்
இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.
முடிவுகள் அறிவிப்பு
மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 978 பதவியிடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக அதிக வெற்றி
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் : ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரத்தை இப்போது பார்ப்போம். தி.மு.க. - 757, அ.தி.மு.க. - 158, சி.பி.ஐ. - 3, சி.பி.எம். - 4, பா.ஜ.க. - 8, தே.மு.தி.க. - 1, காங்கிரஸ் - 30, ம.தி.மு.க. - 14, அ.ம.மு.க. - 4, பா.ம.க. - 35, வி.சி.க. - 11, சுயேச்சைகள் - 76. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்: தி.மு.க. - 83, காங்கிரஸ் - 6, அ.தி.மு.க. - 1, ம.தி.மு.க. - 1.
வாக்குத் தோட்டாக்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த இந்த மகத்தான வெற்றி, சாதியவாத, மதவாத, சனாதன பிற்போக்கு சக்திகளின் அபாண்டமான அவதூறுகளை மக்கள் தமது வாக்குகளால் தகர்த்தெறிந்து மீண்டும் வி.சி.கவை அரவணைத்து அங்கரித்துள்ளனர் என்பதற்கான சான்றாகும். அனைத்துத்தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது விசிக. எமக்கு எதிரான அவதூறுகளை தமது வாக்குத் தோட்டாக்களால் தவிடு பொடியாக்கி எம்மை அங்கீகரித்துள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. 3மாவட்டக் குழுவில் 4 இடங்களில் மட்டுமே விசிக போட்டியிட்டது. அவற்றில் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 75% வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கு எமது மனம்நிறைந்த நன்றி" என்று கூறியுள்ளார்.
ஒன்றியக்குழு
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "அக்டோபர் 06 & 09 ஆகிய நாட்களில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில், ஒன்றியக் குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான சில தொகுதிகளில் விசிக போட்டியிட்டது. அவற்றில் கணிசமான இடங்களில் அனைத்துத்தரப்பு மக்களின் நல்லாதரவோடு வெற்றி வாகை சூடியுள்ளது.
27 இடங்கள்
மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட நான்கில் மூன்று தொகுதிகளிலும் ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43இல் 27 தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டணி இணக்கம்
மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி சட்டமன்றத் தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவதூறுகள்
இந்த மகத்தான வெற்றி திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும் திமுக தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும். அத்துடன், சாதியவாத மதவாத சனாதன பிற்போக்கு சக்திகளின் அபாண்டமான அவதூறுகளை, மக்கள் தமது வாக்குகளால் தகர்த்தெறிந்து மீண்டும் விசிகவை அரவணைத்து அங்கீகரித்துள்ளனர் என்பதற்கான சிறப்புச் சான்றாகும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் விசிகவுக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கி மைய நீரோட்ட அரசியலில் விசிக ஒரு மகத்தான சக்தி என்பதை மீளுறுதி செய்துள்ள எம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.