கேவலம்.. அவமானம்.. மாநிலங்களவை பதவிக்காக இப்படியா? காங்கிரஸை விளாசிய பாஜக நாராயணன் திருப்பதி!
சென்னை: பேரறிவாளன் விடுதலை திமுக வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பாஜக கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது கேவலம், அவமானம் என விமர்சித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி மாநிலங்களவை பதவிக்காக கட்சியின் மானத்தை அடகு வைக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை நேற்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பிஆர் கவாய், ஏஎஸ்போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
அரசியல் கட்சிகள் வரவேற்பு
இந்த தீர்ப்பை திமுக உள்பட பல கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் முதல் அமைச்சர் ஸ்டாலி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நேரில் சந்தித்தனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் இன்று போராட்டம்
பேரறிவாளன் உள்பட 7 பேரையும் கொலைகாரர்கள் என விமர்சனம் செய்துள்ளது. மேலும் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகத்தில் இன்று வாயில் வெள்ளைத்துணி கட்டி போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
பாஜக விமர்சனம்
பேரறிவாளன் விடுதலையை திமுக வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் துணை தலைவரான நாராயணன் திருப்பதி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வெட்கம், கேவலம், அவமானம்
கட்சி தலைவரை கொன்ற குற்றவாளியை கொஞ்சி குலாவும் கட்சியின் தயவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுமா காங்கிரஸ்?. காங்கிரசாரே, ராஜீவ்காந்தியை கொன்ற குற்றவாளிகளை அரவணைக்கும் திமுகவோடு கூட்டணியை தொடர்கிறீர்களே?. இது கேவலம், அவமானம். வெட்கம், மானம், ரோஷம் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் தொடர விரும்பமாட்டார்கள்.
அதிகார அரசியலுக்கு அலைவது
மாநிலங்களவை பதவிக்காக கட்சியின் மானத்தை அடகு வைக்கலாமா? ராஜீவ் கொலை குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுகவுடன் இன்னும் கூட்டணியா?. கொலை குற்றவாளியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதாலும் அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்துபோய் விடும் என்பதாலும் தான் வாயில் துணியை கட்டி கொண்டு போராட்டமா?. அப்படியாவது எம்எல்ஏ, எம்பியாகிவிட வேண்டுமென்று அதிகார அரசியலுக்கு அலைவது ஏன்? நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் இது'' என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.