இடியுடன் மழை...50 கிமீ வேகத்தில் சூறாவளியும் வீசும் - வானிலை மையத்தில் ஜில் அறிவிப்பு
தென்கிழக்கு தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்கிழக்கு,தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் வெளுத்து வாங்குகிறது. சில ஊர்களில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பநிலை சராசரி அளவை விட மேலும் சில டிகிரி உயரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதேபோல் சில மாவட்டங்களில் பூமி குளிர மழை பெய்தது. தென்காசி, போடி நாயக்கனூர், செங்கோட்டை, சூரலக்கோடு, ஆயக்குடியில் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
மழைக்கு வாய்ப்பு
வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கணித்துள்ளது.
சென்னையில் தெளிவான வானம்
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு,தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும். இதனால் நெல்லை, தென்காசி, குமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்ட மலைப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்றும் நாளையும், தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது. 31ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடலில்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் அரபிக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.