இன்று கூடுகிறது அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம்... வேட்பாளர் யார் என்பது இன்று தெரியும்
சென்னை: திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.
இந்த கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது.
அதன்படி, இன்று நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தொகுதியான திருவாரூருக்கு அவர் மறைந்ததை அடுத்து வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஒரு சவாலாகவே அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன. இதுவரை 52 பேரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு முறைப்படி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, எம்.பி.க்கள் பி.வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.