அந்த யாத்திரை.. இந்த யாத்திரை... அட்லீஸ்ட் 5 சீட்டாவது ஜெயிச்சாகனும்...இதுதான் தமிழக பாஜகவின் ப்ளான்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 5 இடங்களில் ஜெயித்தாலே மாபெரும் வெற்றிதான் என்பதுதான் பாஜகவின் வியூகமாக இருக்கிறது.
தமிழகத்தில் 2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதன்பின்னர் எந்த ஒரு சட்டசபை தேர்தலிலும் பாஜகவால் வெல்ல முடியவில்லை.
இடையில் கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற கோஷத்தை எல்லாம் பாஜக எழுப்பிப் பார்த்தது. தனித்துப் போட்டியிட்டும் பார்த்தது பாஜக. ஆனால் தமிழகம் பாஜகவை நிராகரித்தது.
தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.. நாடக கலைஞர்களின் உபகரணங்களுக்கு அரசு பஸ்களில் கட்டணம் கிடையாது
மீண்டும் சட்டசபை பிரவேசம்
தமிழக அரசியல் தலைவர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையில் ஒரு வெற்றிடம் இருக்கிறது; அதை தங்களால் நிரப்ப முடியும் என்கிற கனவில் பாஜக இருந்து வருகிறது. இதற்காகவே எத்தனை எத்தனை பகீரத முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனை வேலைகளையும் பாஜக செய்து வருகிறது.
1996-ல் முதல் வெற்றி
இந்த நேரத்தில் 1996-ம் ஆண்டு முதல் 2019 வரையிலான சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் தமிழகத்தில் பாஜகவுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதையும் நாம் சற்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 1996 சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. இதில் பத்மநாபுரம் தொகுதியில் பாஜகவின் வேலாயுதம் வெற்றி பெற்றார். இதுதான் தமிழகத்தில் பாஜகவின் முதலாவது அறுவடை.
அதிமுக- திமுக கூட்டணியால் லாபம்
1998 லோக்சபா தேர்தலில் அதிமுக, மதிமுக, பாமகவுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது. இதில் 3 லோக்சபா தொகுதிகளில் பாஜக வென்றது. அப்போது பாஜகவின் வாக்கு சதவீதம் 6.9% ஆகும். ஆனால் இந்த கூட்டணி நீடிக்கவில்லை. மீண்டும் 1999-ல் லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றது. இத்தேர்தலில் கோவை, நீலகிரி, திருச்சி, நாகர்கோவில் என 4 லோக்சபா தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
சட்டசபையில் 4 பாஜக எம்.எல்.ஏக்கள்
பின்னர் 2001 சட்டசபை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. அந்த தேர்தலில் காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி என 4 தொகுதிகளில் பாஜக வென்றது. தமிழக சட்டசபையில் பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றது இதுவே முதலும் கடைசியாகவும் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3.2%
அடுத்தடுத்து தோல்வி
2004 லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்திலும் பாஜகவால் வெல்ல முடியவில்லை. 2009 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 2.3% வாக்குகளைப் பெற்றது. பாஜகவின் நம்பிக்கையான கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த கட்சி தோற்றுப் போனது. இந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் 2.3%.
2014ல் மட்டும் 1 தொகுதியில் வெற்றி
2014 தேர்தலில் 3-வது அணியில் பாஜக அணி இடம்பெற்றது. 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வென்றது. இதில் பாஜக பெற்ற வாக்குகள் 5.5%. இதன் பின்னர் 2011 சட்டசபை தேர்தலில் பாஜக, எந்த கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டது. அதில் 2.2% வாக்குகள் மட்டும் பெற்றது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 2016 சட்டசபை தேர்தலிலும் பெரிய கட்சிகளுடனான கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்த பாஜக எதிலும் வெற்றிபெறவில்லை. அதன் வாக்கு சதவீதம் 2.86% கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்று 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்ல வில்லை. அதிமுக மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3.7% மட்டுதான்.
அட்லீஸ்ட் 5 சீட்
இதுதான் தமிழக மக்கள் பாஜகவுக்கு இதுநாள் வரை கொடுத்திருக்கும் மதிப்பு மரியாதை எல்லாம். இருந்தபோதும் 2021 சட்டசபை தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வருவோம்; பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என்றெல்லாம் பேசிவருகின்றனர் பாஜக தலைவர்கள். உண்மையில் பாஜக தலைவர்களின் இலக்கே எப்படியாவது 19 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபைக்குள் நுழைந்துவிட வேண்டும்; குறைந்தது 5 இடங்களிலாவது வென்றுவிட வேண்டும் என்பதுதான்.
அத்தனையும் 5 சீட்டுகளுக்காக..
இந்த 5 சீட்டுகளைப் பெறுவதற்காகத்தான் ஆண்டாள் பிரச்சனை, மனுஸ்மிருதி பிரச்சனை, கறுப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசம் என அத்தனையையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு துள்ளி குதிக்கிறது பாஜக. இத்தனையையும் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அதிமுக, திமுகவில் இருப்பவர்களும் இந்துக்கள்தான் என்கிற அடிப்படையை பாஜக உணர்ந்து கொள்ளாமல் இத்தகைய விபரீதங்களில் இறங்கி இருக்கிறது. இதற்கான அறுவடை என்ன என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லத்தான் போகிறது.