வட இந்தியா பாணியில் தேர்தலுக்காக செப்.17 முதல் மீண்டும் ரத யாத்திரை நடத்தும் தமிழக பாஜக!
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக வட இந்தியா பாணியில் ரத யாத்திரை நடத்துவதற்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வட இந்திய மாநிலங்களில் பாஜகவின் ரத யாத்திரைகள் ஒவ்வொன்றும் சர்ச்சைக்குரியவை. 1990களில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்த அத்வானி நடத்திய ரத யாத்திரையால் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
பாஜக ஒன்னும் "ராவணன்" கட்சி கிடையாது.. கொந்தளித்த சு.சாமி.. என்னாச்சு.. இதுதான் காரணம்!
ரத யாத்திரை விளைவுகள்
பின்னர் பாபர் மசூதியே இடிக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை நிகழ்ந்தது. 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடங்கி 2002 குஜராத் படுகொலை வரை அத்தனைக்கும் இந்த ரத யாத்திரைதான் பிரதான காரணம் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அயோத்தியில் ராமர் கோவில்
இதேபாணியில் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் பாஜகவினர் ரதயாத்திரை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்தில் 27 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் பீகார் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
ம.பி. வெள்ளி செங்கல் ரதயாத்திரை
மத்திய பிரதேசத்தில் அயோத்தி ராமர்கோவிலுக்காக வெள்ளி செங்கல் கொண்டுபோகப் போகிறோம் என கூறி ஒரு ரதயாத்திரைக்கு திட்டமிட்டிருக்கிறது பாஜக. இதேபாணியில் தற்போது தமிழகத்திலும் ஒரு ரதயாத்திரையை நடத்த கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வெற்றிவேல் ரதயாத்திரை
வெற்றிவேல் ரதயாத்திரை என்ற பெயரில் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல் இந்த ரதயாத்திரை மாவட்டங்கள் தோறும் செல்ல இருக்கிறதாம். தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படும் இந்த ரதயாத்திரை தமத் இமேஜூக்கும் பெருமளவு உதவும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறாராம் முருகன். கடந்த 2016 தேர்தலின் போதும் இப்படி ஒரு ரதயாத்திரையை தமிழக பாஜக நடத்தியதும் நினைவில் கொள்ளத்தக்கது.
வட இந்தியா பாணி
தமிழக பாஜகவில் வட இந்தியா கலாசாரம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது புதிய சர்ச்சையாகி வருகிறது. அண்மையில் மதுரையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வத்துக்கு துப்பாக்கி பரிசாக கொடுக்கப்பட்டது. வட இந்தியா பாணியில் துப்பாக்கியை தூக்கிப் பிடித்து வினோஜ் செல்வமும் போஸ் கொடுத்திருந்தது சர்ச்சையாக வெடித்தது.