ஆட்சியமைத்து 2 வாரத்தில் 16,938 படுக்கை வசதி.. கொரோனா தடுப்பு பணியில் அரசு முழுவேகம்.. ஸ்டாலின் பேட்டி
திருச்சி: கொரோனா தடுப்பு பணியில் அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7,300 ஆக்சிஜன் படுக்கைகளும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாளாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களுக்கு நன்றி
தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மே 2-ம் தேதி முதலே கொரோனா தடுப்பு பணிகளை தொடங்கி விட்டேன். எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே அதிகம் விவாதித்தேன்.
அரசு முழுமையாக செயல்படுகிறது
கொரோனா தடுப்பு பணியில் அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. தமிழக மக்களின் உயிர்காக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி பணிகள் முடுக்கி விடப்பட்டன. கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற சென்னையில் வார் ரூம் அமைக்கப்பட்டது.
ரூ.2 ஆயிரம் நிவாரணம்
இந்த வார் ரூம்களை மதுரை, கோவை போன்ற பிற நகரங்களிலும் அமைக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். இதனால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதி ரூ.2,000 நிவாரண தொகை ஜூன் 3-ம் தேதிக்குள் வழங்கப்படும்.
அனைவருக்கும் தடுப்பூசி
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
16,938 படுக்கை வசதிகள்
5 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக பெற உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான வட்டியை 6 மாதம் வசூலிக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணி தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7,300 ஆக்சிஜன் படுக்கைகளும் அடங்கும்.
ஊரடங்கு நீடிக்கப்படுமா?
ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும். அதன் பிறகு ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்பது குறித்து அறிவிக்கப்படும். கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாளாகும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.