'வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா கண்டிப்பாக இதை சொல்வேன்'.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ரூ.35.43 கோடி மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 46 முடிவுற்ற திட்ட பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:- புதிய முதலீடுகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது திமுக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் ரூ.1.34 லட்சம் கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்.
விஜயலட்சுமி வழக்கு.. சைதை கோர்ட்டில் ஹரி நாடார் ஆஜர்படுத்தப்படுகிறார்.. 3 நாள் காவல் கேட்க திட்டம்
ஏதாவது சாதிச்சியானு கேட்டா...
என்னுடைய வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா பட்டியல் போடுவதற்கு ஏராளம் உள்ளது. இந்த பட்டியலில் நிச்சயம் இடம் பெறும் முத்தான திட்டம்தான். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமில்லாது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் குடிநீருக்காக பல கி.மீ நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்களுக்கு கிடைக்ககூடிய குடிநீரில் புளோரைடு அதிகமாக கலந்து இருந்தது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட மக்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும், பற்களில் கறை படுவதும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து 2 மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்கு நிறைவேற்றபட்ட திட்டம்தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இந்த திட்டம் கருணாநிதியின் சிந்தனையில் உதித்த திட்டம். அப்போது நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தேன். இந்த திட்டம் கொண்டு வருவதற்கு நான் எந்த அளவுக்கு முனைப்புடன் இருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜப்பான் சென்றேன்
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கருணாநிதி என்னை ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இதற்கான திட்டமிடுதல், நிதி வசதி ஏற்பாடு செய்து பணிகளை முடுக்கி விட சொன்னார். அதன்படி இதற்கான பணிகளை செய்தேன். அப்படி உருவாக்கபட்டதுதான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். 2008-ம் ஆண்டு கருணாநிதி தர்மபுரிக்கு நேரடியாக வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நான் பலமுறை கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு ஆய்வு செய்து பணிகளை முடக்கி விட்டேன்.
அதிமுக முடக்கியது
சுமார் 80 சதவிகித பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஆட்சி இந்த திட்டத்தை முடக்கி வைத்தது. இந்த திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று கூறி நானே தருமபுரி மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள மக்களை ஒன்று திரட்டி போராட்டமே நடத்தியுள்ளோம். அதன்பிறகு வேறு வழியில்லாமல் இந்த திட்டத்தை கடந்தகால அரசு நிறைவேற்றியது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2.0
தருமபுரியை நினைத்தாலே எனது நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். அதனை மறக்கவே முடியாது. இப்போது இந்த 2 மாவட்டத்தில் இருக்க கூடிய 3 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 7639 ஊரக குடியிருப்புகள் கொண்ட மக்கள் வாழக்கூடிய மக்களுக்கு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் அளவை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை( ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2.0) ரூ.4,600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த கூடிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் துவங்கும்.
சேலம்-தருமபுரி புதிய மேம்பாலம்
சேலம்-தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோ ட்டையூருக்கும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டனுருக்கும் இடையே புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும். தர்மபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் தர்மபுரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும். தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.40 கோடி செலவில் கூடுதல் கட்டிடங்கள் அமைக்கப்படும்,. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.