அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா எதிரொலி- எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்- திமுகவுக்கு குடைச்சல் தரும் காங்.
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் தங்களிடம் 18 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இனி ராஜ்யசபா எம்.பி தேர்தல் நடைபெற்றால் தங்களுக்கு ஒரு சீட் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்ற குடைச்சலை திமுகவுக்கு கொடுக்க தொடங்கிவிட்டதாம் காங்கிரஸ்.
வீழ்வேன் என நினைத்தாயோ? 3 ஆண்டுகளுக்குப் பின் ஆக்டிவ் அரசியலில் லாலு-பீகாரில் இனிதான் ஆட்டம்!
சட்டசபை தேர்தலில் அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்களான கேபி முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் போட்டியிட்டு வென்றனர். ஒரத்த நாடு தொகுதியில் வைத்திலிங்கமும் வேப்பனஹள்ளியில் கேபி முனுசாமியும் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் தற்போது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
2 ராஜ்யசபா எம்.பி. இடங்கள்
ராஜ்யசபா எம்.பி. பதவியை இருவரும் ராஜினாமா செய்திருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் நடைபெறும் விவாதம். 2 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
78 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை
ராஜ்யசபா தேர்தலின் போது, மொத்தம் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை X100/(காலி இடங்கள் எண்ணிக்கை +1) +1 என்ற அடிப்படையில் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்பது கணக்கிடப்படும். தற்போது தமிழகத்தில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், 1 எம்.பி.க்கு 78 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படும். ஆகையால் 75 இடங்களைக் கொண்ட அதிமுக கூட்டணிக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்காது.
திமுகவில் 2 பேருக்கு வாய்ப்பு?
159 இடங்களில் வென்ற திமுக கூட்டணிக்கு 2 எம்.பிக்கள் கிடைக்கும். ஆகையால் திமுகவில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கார்த்திகேய சிவசேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பியாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி புதிய குடைச்சலை கொடுக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜ்யசபா சீட் கேட்கும் காங்கிரஸ்
திமுகவுக்கு அடுத்ததாக அந்த கூட்டணியில் 18 இடங்களில் வென்றுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கும் 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என பஞ்சாயத்தை தொடங்கிவிட்டதாம் அந்த கட்சி. இது தொடர்பாக டெல்லியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனராம் தமிழக காங். தலைவர்கள்.
திமுக நிலை?
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதுவும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது திமுக. காங்கிரஸ் தயவு இல்லாமல் ஆட்சியை கெத்தாக திமுக நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது. இதே கெத்தை திமுக தொடருமா? இல்லை பிரச்சனையே வேண்டாம் என காங்கிரஸுக்கும் ஒரு ராஜ்யசபா இடம் தருமா? என்பது எதிர்பார்ப்பு.