1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன?
சென்னை: காங்கிரஸ் கட்சி தரப்பில் 29 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை திமுகவிடம் கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு திமுக நிர்வாகிகள், 23 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் மார்ச் 3ஆம் தேதிக்கு அந்த வேட்பாளர் யார் என்பதை கூற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி இருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இது தொடர்பாக டிசம்பர் மாதத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக பேசி வந்தனர். ஆனால் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று வெளிப்படையாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து சில எதிர்ப்புக் குரல் வந்தாலும், உடனடியாக விஷயம் சோனியா காந்தி வரை சென்றது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை தரப்பில் திமுக உடன் தொகுதி பங்கீட்டை பேசி விரைவாக முடிவு எடுங்கள் என்று மட்டும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கப்சிப் மோடுக்கு சென்றனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச திமுக அழைத்தது. காங்கிரஸ் கட்சி தரப்பில் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திமுகவின் டிஆர் பாலு, எவ வேலு, ஆ.ராசா உள்ளிட்டோரிடம் பேசினர். அப்போது கிரிஷ் சோடங்கர் தரப்பில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் வாக்கு வங்கி இருக்கிறது.
புதிய கட்சிகள் இணைந்திருப்பதால், கூட்டணியில் உள்ள பழைய கட்சிகளின் தொகுதி எண்ணிக்கையை குறைக்க போவதாக சொல்கிறார்கள். எங்கள் தலைமை ஆலோசனையின்படி 29 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் கேட்க அறிவுறுத்தியதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு டிஆர் பாலு, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிகரிக்க முடியாது.
23 சட்டசபைத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை தருகிறோம். அதேபோல் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் காங்கிரஸ் கட்சி தாமதம் செய்யாமல், மார்ச் 3ஆம் தேதிக்குள் வேட்பாளர் பெயரை சொல்ல வேண்டும். முடிந்த வரை தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை சொல்லுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இதன்பின் எங்கள் தலைமையுடன் ஆலோசித்துவிட்டு சொல்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியினர் வெளியில் வந்துள்ளனர். இருப்பினும் கிரிஷ் சோடங்கரின் முடிவு வாடிப்போய் இருந்தது. ஆனால் செல்வப்பெருந்தகை கூட்டணி பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக நடந்ததாக தெரிவித்தார். அதேபோல் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications