புயலை கிளப்பும் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை- இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்ச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.

தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் நிதி நிலவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பதை சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த்து.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவைகளுக்கான செலவுகள் உள்ளிட்டவை இந்த 120 பக்க வெள்ளை அறிக்கையில் இடம்பெற உள்ளது. இது தொடர்பாக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதங்களும் நடைபெற உள்ளன.
அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் 13-ந் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். முன்னதாக நாளை மறுநாள் 10-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சபாநாயகர் அப்பாவு தலைமையிலான இந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். பொதுவாக சட்டசபை கூட்டம் தொடங்கிய பின்னர் முதல் நாளில்தான் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications