ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. என்னென்ன தானியங்கள்?
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, கோவை மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு.. காலையில் இருந்து ரேஷன் கடைகளில் குவியும் மக்கள்!
ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள்
இதுதவிர பொங்கல் பண்டிகை காலத்திலும் சிறப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கூட மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
அரசாணை வெளியீடு
இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டது. இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், ' சென்னை, கோவை மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும்.
என்னென்ன சிறு தானியங்கள்?
கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளுக்கு விற்பனை எப்போது?
தற்போது முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்னர் மற்ற மாவட்ட ரேஷன் கடைகளிலும் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.