கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி: தணிக்கை செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

நகைக்கடன்
நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.

தள்ளுபடி
இதையடுத்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். இந்நிலையில், ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு
இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தணிக்கை செய்ய மண்டல மற்றும் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நகர கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு என தனித்தனியாக சிறப்பு தணிக்கை செய்யப்பட உள்ளது.

அலுவலர்கள்
இதனோடு சோதனை தணிக்கை மேற்கொள்ளும் அலுவலர்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தணிக்கை செய்து அறிக்கை அனுப்பும் பணி வரும் 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, நகைகள் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications