தீபாவளி போனஸ் எவ்ளோ? தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அறிவிக்க கூடாது- அன்புமணி கோரிக்கை!
சென்னை : பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது பற்றி தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், பொதுத்துறை நிறுவனங்கள் விரைந்து, தொழிற்சங்கத்தினருடன் பேசி போனஸ் அறிவிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகை
வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், போனஸ் தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து இன்னும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

தீபாவளி போனஸ்
இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்கக் கோரி பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படக் கூடிய தொழிற்சங்கங்கள் அந்தந்த நிர்வாகங்களிடம் கோரிக்கை அளித்துள்ளன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை அறிவிப்பு இல்லை
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ், ரூ.10,000 முன்பணம் ஆகியவற்றை வழங்குவது குறித்து அரசுத் தரப்பிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த விஷயத்தில் தேவையற்ற தாமதம் கூடாது.

அரசின் மௌனம்
போனஸ், முன்பணம் ஆகியவை குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக நிர்வாகங்களிடம் கடிதம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுத் தரப்பின் மவுனம் ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

புதுத்துணி வாங்க வேண்டாமா?
தீபாவளி திருநாளுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. போனஸ் மற்றும் முன்பணத் தொகை மூலம் தான் தீபஒளிக்கு தேவையான புத்தாடை உள்ளிட்ட பொருட்களை தொழிலாளர்களால் வாங்க முடியும். இந்த அவசியத்தையும், அவசரத்தையும் தமிழக அரசு உணர வேண்டும்.

தன்னிச்சையாக அறிவிக்கக்கூடாது
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்சம் 25% போனஸ் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்க அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் முன்வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications