முதல்வர் முதல் மொத்த அரசு இயந்திரமும் சுறுசுறுப்பு.. கஜா புயலை எதிர்கொள்வதில் அசத்தும் தமிழக அரசு
சென்னை: கஜா புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலாக மாறத் தொடங்கிய உடனேயே தமிழக அரசு முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியது.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, உடனடியாக புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய ஆறு மாவட்டங்களுக்கும் சிறப்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நிவாரண முகாம்கள்
இன்று புயல் கரையை கடக்க உள்ளதாக வானிலை இலாகா அறிவித்ததும், அங்கங்கே உள்ள நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 95 முகாம்கள் இன்று இரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தன. 3246 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 398 பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறை
புயலால் பாதிக்கப்படக்கூடிய, 6 மாவட்டங்களில், பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று அரசு விடுமுறை விடப்புடம் என்று நேற்றே அறிவிக்கப்பட்டது. அதேபோல, முன்னெச்சரிக்கையாக, நாளையும் கூட அந்த மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்கு முன்பாகவே வீடு திரும்பி விட வேண்டும் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்பாடுகள் சிறப்பு
இன்று, மாலை முதலே, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து முழுக்க நிறுத்தப்பட்டது. மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து மக்களை போலீசார் எச்சரிக்கை செய்து வெளியேற்றினர். புயல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி என்பது பற்றி அனிமேஷன் வீடியோவை அரசு வெளியிட்டது. புயல் கரையை தொடும் முன்பாகவே இத்தனை ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
அமைச்சர் முகாம்
சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அங்கேயே முகாமிட்டு உடனுக்குடன் அனைத்து தகவல்களையும் அதிகாரிகளிடமிருந்து கேட்டுப் பெற்று, உரிய உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இது தவிர, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் முதல்வரின் முகாம் அலுவலகத்திற்கு வருவாய் துறை அமைச்சகத்தில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கொண்டே இருந்தது.
போன் செய்த முதல்வர்
இரவு 7.45 மணியளவில், அமைச்சர் உதயகுமாரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரம் கேட்டு அறிந்தார். இவ்வாறு முதல்வர் முதல், மொத்த அரசு இயந்திரமும் புயலை எதிர்கொள்ள சிறப்பாகத் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. புயலுக்கு பிறகும் இதேபோன்ற உத்வேகத்தோடு மீட்பு பணிகளையும், மின்சார வசதி போன்றவற்றை திருப்பித் தருவதிலும் அரசு கவனம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.