ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்... தலைமை காஜி வேண்டுகோள்
சென்னை: லாக்டவுன் காரணமாக ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு தமிழக அரசின் தலைமை காஜி இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்துவது இஸ்லாமியர்களின் வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லாக்டவுன் அமலில் உள்ளதால் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

நூற்றுக்கு 90 % இஸ்லாமியர்கள் இந்தாண்டு புத்தாடைகள் எடுக்கவில்லை. சிறப்பு தொழுகையே நடத்த முடியாத போது புத்தாடைகள் அணிந்து என்ன பயன் எனக் கருதி ரம்ஜான் ஷாப்பிங்கை பெரும்பாலானோர் தவிர்த்துள்ளனர். இந்த சூழலில், நான்காம் கட்ட லாக்டவுன் நீட்டிப்பில் வழிபாட்டுத் தலங்களுக்கு அரசு அனுமதி அளிக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த தளர்வையும் அரசு அறிவிக்கவில்லை.
இதனிடையே தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் ரம்ஜான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல்களிலோ, மைதானங்களிலோ நடத்துவதற்கு இந்தாண்டு சாத்தியமில்லை. எனவே எதிர்வரும் ரம்ஜான் பண்டிகை அன்று, இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்புத் தொழுகையை நடத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications