கொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி?- அதிகாரிகள் ஆய்வு
சென்னை: கொரோனா பாதிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பொறியியல் கல்லூரியை மாற்றுவது குறித்து அரசு அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

கொரோனா நோய் தொற்று அறிகுறி இருக்கக் கூடியவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இப்படி கண்காணிக்கப்படுவோருக்கான தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களை அரசு பயன்படுத்தலாம் என வேண்டுகோள் வைத்தனர்.

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தமது கட்சித் தலைமை அலுவலகத்தையும் தமக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:

கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்று (08/04/2020 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியா, செங்கல்பட்டு SP திரு. கண்ணன், மதுராந்தகம் DSP திரு. கந்தன், செங்கல்பட்டு RDO திரு. செல்வம், மதுராந்தகம் RDO திருமதி. லட்சுமி, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications