மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்திருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இலவச மின்சார திட்டத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா என்பது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிக அதிகாரம், அதிகபட்ச மின் கட்டணம் நிர்ணயம் என பல அம்சங்களைக் கொண்டது. இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சமாக, மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளது.
இந்த மசோதாவுக்கு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதமும் அனுப்பி இருந்தனர்.
ஆனால் மாநிலங்களின் எதிர்ப்புகளை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இன்று லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அறிமுகம் செய்தார். இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இம்மசோதா நிறைவேறினால் தமிழகத்தில் இலவச மின்சாரத்தை நம்பி இருக்கும் பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றார். பின்னர் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனைத் தொடர்ந்து மின்சார சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா அறிமுகத்துக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது: மத்திய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் மிக கடுமையாக பாதிக்கும். ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இம்மசோதா உருவாக்கப்பட்டிருக்கிறது. மின்சார சட்ட திருத்த மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே எதிர்த்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவிலும் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று இம்மசோதாவை மிக கடுமையாக எதிர்த்துள்ளார். ஆனாலும் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தே மத்திய அரசு இம்மசோதாவை கொண்டு வருகிறது. இம்மசோதாவால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் என அத்தனையும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஆகையால் இம்மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
மின்சார சட்ட திருத்த மசோதா.. நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்த திமுக.. விளாசிய செந்தில் பாலாஜி!