தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி- மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனுமதி தருமா?
சென்னை: தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி உருவெடுத்து நிற்கிறது. சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பது திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவைகளின் வலியுறுத்தல்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. மாநிலத்தில் எந்த அரசு ஆட்சி செய்தாலும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் வராமல் இருப்பது இல்லை.
அதேநேரத்தில் திராவிட மாடல், தந்தை பெரியார் பூமி, பெரியாரின் அரசு என்று பேசும் திமுக அரசு, சில விஷயங்களில் மென்மைத்தன்மையை கடைபிடிக்கிறது; அல்லது நேர் எதிர் நிலைப்பாட்டை எடுக்கிறது என்கிறது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கோவை கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் ஷாகாக்களுக்கு அனுமதி தொடங்கி இந்த சர்ச்சை நீடிக்கிறது.
தஞ்சை விளார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சசிகலா அஞ்சலி- இனப்படுகொலையை விவரித்தார் பழ. நெடுமாறன்!
பல்லக்கு விவகாரம்
அண்மையில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமக்கும் நிகழ்ச்சிக்கு முதலில் திமுக அரசு தடை விதித்தது. இதன்பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் பல்லக்கில் சுமக்கும் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதித்தது. இதனை திமுகவின் தோழமை சக்திகளான திமுக, விசிக கடுமையாக எதிர்க்கின்றன. இதேபோல் ரூ25 கோடியில் பசுமடம் அமைக்கும் விவகாரமும் சர்ச்சையானது.
மாட்டிறைச்சி தடை
பின்னர் வட இந்தியாவைப் போல மாட்டிறைச்சி விவகாரம் பேசுபொருளானது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது திமுக அரசு மீது கடும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக ஆம்பூர் பிரியாணி திருவிழாவே ரத்தாகிப் போனது. இதனால் திமுக அரசு சற்றே பெருமூச்சுவிட்டது.
முள்ளிவாய்க்கால் சீமான்
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி, திமுக அரசுக்கு நெருக்கடியாகி உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுக்கப் பரவி வாழக்கூடிய தமிழர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து, சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இனப்படுகொலை நாளை நினைவுகூர்வதற்கும் எவ்விதத் தடையும் விதிக்கக்கூடாதெனவும் வலியுறுத்தி இருந்தார்.
திருமாவளவன் எம்.பி.
இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பையொட்டி மெழுகுவர்த்தி ஏந்துதலை மே17 இயக்கம் மெரினா கடற்கரையில் நடத்திட அனுமதி கோரியுள்ளது. இதற்கு உடனே அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இது 'இனக்கருவறுப்புக் கொடூரத்தைக்' கண்டிக்கும் அறப்போரேயாகும். எனவே அரசே அனுமதி வழங்கு என வலியுறுத்தியுள்ளார். இப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம் தமிழக அரசுக்கு நெருக்கடியாகி இருக்கிறது.