ஜல்லிக்கட்டு போராட்டம்: 26,460 பேர் மீதான 308 வழக்குகள் வாபஸ்- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது 26,460 பேர் மீது தொடரப்பட்ட 308 வழக்குகள் ரத்து செய்யும் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5.2.2021 அன்று தமிழக சட்டசபையில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுப்பூர்வமான போராட்டம். இந்த போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகளில் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர். இந்தப் போராட்டங்களின் போது சட்டம் ஒழுங்கை பராமரித்திட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
எனினுல் சில விரும்பத்தகாத சம்பவங்கள் இந்த போராட்டங்களின் போது நடந்துவிட்டன. இந்த வழக்கிற்குள் உணர்வுப்பூர்வமாக போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு இந்த போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களைத் தாக்கியது, தீ வைப்பு போன்ற சட்டப்பூர்வமான திரும்பப் பெற முடியாத ஒரு சில வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை சட்ட வல்லுநர்கள் ஆலோசனையைப் பெற்று எனது தலைமையிலான அரசு திரும்பப் பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 26,460 பேர் மீதான 308 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 281 வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன. 21 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் இருக்கின்றன என உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.