சேதமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறு கட்டுமானம்.. சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் சேதமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்படும் என்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோசமான குடியிருப்பு கட்டிடம்
கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியானது. மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரசுக்கு கோரிக்கை
இந்த கட்டிட விவகாரம் தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்ட்டனர். ஐஐடி குழுவினரும் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். இஹதேபோல் முகப்பேர் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடமும் தரமற்று இருப்பதாக அங்கு குடியிருக்கும் அரசு பணியாளர்கள் குற்றம்சாட்டினார்கள். இதேபோல் சேதம் அடைந்த பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மறு கட்டுமானம்
இந்த நிலையில் சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்படும் என்று குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை (குடிசைப்பகுதி மாற்று வாரியம்) மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

வல்லுநர் குழுக்கள்
தமிழகத்தில் சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று அப்போது அவர் கூறினார். கட்டுமானப் பணிகளின் தரத்தினைப் பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற மூன்றாம் தரப்பு தரக் கட்டுப்பாடு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புனரமைக்கப்படும்
பராமரிப்பின்றி பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.70 கோடி செலவில் எழில்மிகு தோற்றப் பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.8,000 கருணைத் தொகை ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications