மம்தா மற்றும் பினராயி ஆட்சி கவிழ்க்கப்படும்? எச்சரிக்கை மணி அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
சென்னை: தனது முதல்வர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதற்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவால் திகார் சிறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறார். ஆகவேதான் அவரை தேர்தல் முடியும் வரை வெளியில் வைத்திருக்கக் கூடாது என்று பாஜக பல வழிகளில் முயற்சிகளைச் செய்தது.

2 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட எஃப்ஐஆர் வைத்து, தேர்தல் தேதி அறிவிக்க உள்ள சில நாள்கள் முன்னதாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
அந்தக் கைதே சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால். அதற்கான விளக்கத்தை வழங்குமாறு அமலாக்கத்துறையை நீதிபதி கேட்டிருந்தார்.
ஆனால், சரியான கால வரம்புக்குள் விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை முன்வரவில்லை. அதனடிப்படையில் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம், ஆனால் முதலமைச்சர் அலுவலகத்திற்குச் செல்லக்கூடாது என்ற சில நிபந்தனைகளுடன் அவரை ஜாமினில் விடுவித்தது உச்சநீதிமன்றம்.
அவர் வெளியே வந்தது முதல் பாஜகவுக்கு எதிராகப் பல குண்டுகளைப் போட்டு வருகிறார். முதலில் பிரதமர் மோடிக்கு 72 வயதுக்கு மேல் ஆகிறது. ஆகவே பாஜக கட்சியின் விதிப்படி அவர் 2 வருடங்கள்தான் பிரதமராக இருக்க முடியும். அதன்பின்னர் அமித்ஷாதான் பிரதமரா? என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பினார்.
அது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இப்போது அவர் ஒரு ஆங்கில பத்திரிகைக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் ஏன் பதவியை ராஜினாமா செய்யவில்லை. செய்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பது பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தனது பேட்டியில், "நாடு மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தை மெதுவாகக் கடந்து சென்றது. இப்போது மிக விரைவாக, நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. மத்திய பாஜக அரசு முதலில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனையும், பிறகு என்னையும் கைது செய்தது.
கெஜ்ரிவாலைப் பொய் வழக்கில் கைது செய்தால், யாரையும் கைது செய்யலாம் என்ற செய்தியை நாட்டு மக்களுக்குக் கொடுத்துள்ளனர். மக்கள் அவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவை எல்லாம் சர்வாதிகாரத்தின் அடையாளங்கள்தான்.
ஜனநாயகத்தில், மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆனால் பாஜக அரசு சொல்வதைக் கேட்கும்படி மக்களை நிர்ப்பந்தம் செய்கிறார்கள். இந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஒருவகையில் இதுவும் சுதந்திரப் போராட்டம் போலத்தான்.
இன்று என்னை ஊக்குவிக்கும் பலர் அந்தக்காலத்தில் சிறை சென்றுள்ளனர். நான் சிறைக்குச் சென்றது நாட்டைக் காப்பாற்றுவதற்காகத்தான். நான் ஊழல் செய்ததால் செல்லவில்லை. மனிஷ் சிசோடியா தவறு செய்ததால் செல்லவில்லை.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக மக்கள் நீண்ட காலம் சிறை சென்றார்கள் இல்லையா? அதைப்போல், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற நாங்கள் இன்றைக்குச் சிறைக்குச் செல்கிறோம்.

நாட்டிற்காக என் உயிரைக்கூடத் தியாகம் செய்வேன் என்று நான் அடிக்கடி கூறி வருகிறேன். அந்தப் போராட்டத்திற்காக ஒரு பகுதி இது" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது பேட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் பல அதிர்ச்சியான செய்திகளைப் பேசியுள்ளார். அவரிடம் நீங்கள் ஏன் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆட்சியைச் சிறையிலிருந்தே நடத்துவேன் என்கிறீர்கள்? அது எப்படி சாத்தியம் எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கெஜ்ரிவால், "முதலில் நான் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதை விளக்குகிறேன். நான் எனது பதவி நாற்காலியில் சிக்கிக்கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நாற்காலிக்காக அல்லது பதவிக்காகப் பேராசை பிடித்தவன் நான் இல்லை.
நான் வருமான வரித்துறை ஆணையராக இருந்தபோது, டெல்லியில் உள்ள சேரிகளுக்குப்போய் வேலை செய்வதற்காக அரசு வேலையை விட்டவன். ஆகவே சொல்கிறேன் எனக்குப் பதவி ஆசை கிடையாது.
நான் முதல்வராகப் பதவியேற்றதும் 49 நாட்களில் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ராஜினாமா செய்தேன். அதை எனது கொள்கைகளுக்காக நான் செய்தேன்.
இந்த முறை எனது போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பதவியைப் பார்க்கிறேன் என்பதால் நான் பதவி விலகவில்லை. டெல்லியில் கெஜ்ரிவாலைத் தோற்கடிக்க முடியாது என்பதை பாஜகவினர் புரிந்துகொண்டுள்ளார்கள்.
எங்கள் கட்சிக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 67 இடங்கள் கிடைத்தன. மற்றொரு சந்தர்ப்பத்தில் 62 இடங்களும் கிடைத்தன. எனவேதான் பாஜகவினர் என்னைப் பொய் வழக்கில் சிக்க வைக்கிறார்கள்.

அதனால் நான் ராஜினாமா செய்துவிட்டால், அவர்களால் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். இது ஜனநாயகத்திற்கே ஆபத்தானது.
இன்றைக்கு நான் பதவி விலகினால் நாளை மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் போன்றவர்களின் ஆட்சியையும் கவிழ்ப்பார்கள். பாஜக எந்த மாநிலத்தில் தோற்றாலும் அங்குள்ள முதல்வரைக் கைது செய்து அவரது ஆட்சியைக் கவிழ்க்கலாம்.
ஆகவேதான் ராஜினாமா செய்யக் கூடாது என்ற முடிவை நான் எடுத்தேன். இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
ஜனநாயகத்தைச் சிறையில் அடைத்தால், ஜனநாயகம் சிறையிலிருந்து இயங்கும். இந்த அதிகார பற்களையும் அதன் நகத்தையும் எதிர்த்து நாங்கள் போராடுவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications