பச்சைக் குழந்தைகளை அப்படியா பேசுறது? பறிபோகும் தவாக வேல்முருகனின் பதவி? சபாநாயகருக்கு பறந்த கோரிக்கை
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் இரண்டு கட்டங்களாக மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கினார். இந்த நிலையில் விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து ஆபாசமாக பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு எதிராக கண்டனம் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டசபை சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடிதம் எழுதி உள்ளது
2023 ஆம் ஆண்டு முதல் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து நேரில் வரவழைத்து பாராட்டி வருகிறார்.
அந்த வகையில் கடந்த 30ஆம் தேதியும், 4ஆம் தேதியும் விஜய் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விஜய் மாணவர்கள் சந்திப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் ஆன வேல்முருகன் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவர்களையும் அவர்களின் பெற்றோரையும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் முருகன் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில், தமிழக வெற்றி கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவலை அடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டசபை சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடிதம் எழுதி உள்ளது இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முஸ்தபா எழுதியுள்ள கடிதத்தில்,"த.வெ.க., தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரை, ஆண்டுதோறும் சந்தித்து கவுரவப்படுத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர், விஜய் மீது இருக்கும் அன்பை, பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தன் குழந்தைகள் போல் விஜய் அவர்களுடன் நடந்து கொள்கிறார். பள்ளி படிக்கும் குழந்தைகள், விஜயை கட்டிப்பிடிப்பது, அவர் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுவதை, சில அரசியல் சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அநாகரிகமாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி இருப்பதை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கண்டிக்கிறோம்.
மாணவியரையும், அவரது பெற்றோரையும், அருவருக்கத்தக்க வகையில், மிகவும் கீழ்த்தரமாக வேல்முருகன் பேசி இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகில்லை. எம்.எல்.ஏ.,வாக இருந்துகொண்டு, தமிழக பெண் குழந்தைகள் குறித்தும், அவர்கள் பெற்றோர் குறித்தும் அநாகரிகமாக பொதுவெளியில் பேசியிருப்பது, வரலாற்று சிறப்புமிக்க சட்டசபைக்கு, மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications