சார் அந்த 2000 ரூபாய்.. எப்ப சார் தருவீங்க.. ஆஹா.. மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாய்ங்களே!
சென்னை: நாங்க இப்பவும் வறுமையில் தான் வாடுறோம். அதான் தேர்தல் முடிஞ்சிடுச்சே அந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எப்ப சார் தருவீங்க.. என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் கேள்வி கலந்த கோரிக்கையை எதிர்பார்ப்புடன் முன்வைத்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கு கொஞ்ச நாட்களே இருந்த நிலையில் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் பழனிச்சாமி, ரூ.2 ஆயிரம் மக்களின் வங்கிகணக்கில் போடப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான திட்டமிடல்கள் மிகவேகமாக நடந்தது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வங்கிகணக்கை சேகரித்து விநியோகித்துவிட வேண்டும் என தீவிரமாக வேலை நடந்தது.
இதற்காக அனைத்து பெண்களின் வங்கி கணக்கும், வீட்டின் நிலவரங்கள் குறித்து விண்ணப்பத்தில் தகவலும் ஒவ்வொரு கிராம வாரியாக வாங்கப்பட்டது. இந்த தகவல்களை வைத்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை தருவதற்கு தமிழக அரசு தேர்தலுக்கு முன்பு தீவிரமாக இருந்தது.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் காரணமாக ரூ2 ஆயிரம் தரப்படவில்லை.அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விஷயத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது போகும் இடம் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கூறி வந்தார்கள். தற்போது தேர்தலும் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களித்துவிட்டனர். திமுக 13 இடங்களிலும், அதிமுக 9இடங்களிலும் வென்றன.இதன் மூலம் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இனி ஆட்சிக்கு எந்த அபாயமும் இல்லை என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் அதான்தேர்தல் முடிஞ்சு ஓட்டு எண்ணிக்கையும்அறிவிச்சுட்டாங்களே இனியாவது வறுமையை போக்க தருவதாக சொன்ன ரூ.2 ஆயிரம் பணத்தை உடனே வழங்கி கஷ்டத்தை போக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்ற பின்னர் 2 ஆயிரம் அறிவிப்பை முதல்வர் பழனிச்சாமி வெளியிடுவாரா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாங்க இப்பவும் வறுமையில் தான் வாடுறோம். அதான் தேர்தல் முடிஞ்சிடுச்சே அந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எப்ப சார் தருவீங்க.. என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் கோரிக்கை கலந்த கேள்வியினை முன்வைத்துள்ளனர்












Click it and Unblock the Notifications