பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக வரிந்து கட்டிய தமிழகம்- 24 கட்சிகளின் மனித சங்கிலி எழுச்சி போராட்டம்
சென்னை: தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளை அனுமதிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்தி 24 கட்சிகள் பங்கேற்ற பிரம்மாண்ட மனித சங்கிலி போராட்டம் இன்று சென்னை உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் முன்னெடுப்பில் 24 அரசியல் கட்சிகள், 44 இயக்கங்கள் ஆதரவுடன் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று இந்துத்துவா சக்திகளைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
ஒரே மதம், ஒரே மொழி.. இந்தியை திணிப்பதே பாஜக அரசின் வேலை! அமித்ஷா குழுவுக்கு கமலின் மநீம கண்டனம்
பங்கேற்றது யார் யார்?
இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் திராவிடர் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ, நாம் தமிழர் கட்சி, சிபிஐ (எம்.எல்-விடுதலை),தமிழ்ப்புலிகள் கட்சி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ், தமிழக விடியல் கட்சி .பீமாராவ் குடியரசு கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன.
கோவையில்..
கோவை மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவையில் கடந்த மாதம் இரு பிரிவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில்
அமைதியை பேணிக்காக வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் நஞ்சப்பா சாலை மற்றும் கிராஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. சி.பி.எம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் , தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஏன் இந்த போராட்டம்?
இதுகுறித்து மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது: தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து ஜன நாயக அமைப்புகள் நடத்தும் மனித சங்கிலியில் பெருந்திரளாக மக்கள் பங்கெடுத்து தமிழகத்தில் இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளனர் என்றர். சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , கடந்த 15 நாட்களாக இந்து அடிப்படைவாத அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கோவையை பதற்றம் மிகுந்ததாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயக, மத சார்பற்ற, இடதுசாரி அமைப்புகள் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகளின் ஒன்றிணைந்து அமைதியான கோவை அனைவருக்கும் தேவை, அமைதியான தமிழகம் அனைவருக்கும் தேவை என்பதற்காக தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
திருப்பத்தூர், புதுகையில்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் எதிரில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கியில் அண்ணா சிலை அருகில் ஸ்டேட் பேங்க் முதல் தாலுகா ஆபிஸ் வரை சாலையில் இன்று மாலை 5 மணி அளவில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.