"அந்த 3 நாட்கள்” மாணவிகளை அதிரவைத்த கேள்வியால் சர்ச்சை.. விழிப்புணர்வுக்காக என கல்வித் துறை விளக்கம்
சென்னை : பள்ளி மாணவிகளிடம் மாதவிடாய் குறித்து வகுப்பறையில் கேள்வி எழுப்பப்பட்டது சர்ச்சையான நிலையில், அறிவியல் பூர்வமாக பள்ளி மாணவிகளிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மீதான அக்கறையின் காரணமாகவே மாதவிடாய் குறித்து கேள்வி கேட்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
புதிதாக, 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை மின்னணு தள செயலி ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த எமிஸ் செயலி மூலம் மாணவ - மாணவியரிடம் எட்டு வகைகளில் 64 கேள்விகளுக்கு பதில் பெற்று பதிவு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணியானது தினமும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிஸ் செயலி
மாணவ, மாணவிகளிடம் கேட்டு புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சேகரிக்கப்படும் தகவல்கள் தினமும் EMIS பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணைய முறைமையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. தற்போது பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஆசிரியர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாணவர்களின் உடல் நலன் மற்றும் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் பொருட்டு பல்வேறு தகவல்களை திரட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கேள்விகள்தான் தற்போது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

64 கேள்விகள்
அந்த கேள்விகளில் இடம் பெற்றிருந்த 64 வகையான கேள்விகளில், மாணவியருக்கான மாதவிடாய் பிரச்னைகள் குறித்த கேள்விகளும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள பள்ளிக் கல்வித் துறை, பள்ளி மாணவியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உடல் நலன் மீதான அக்கறை காரணமாகவும் மாதவிடாய் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாதவிடாய் குறித்து கேள்வி
மாணவியரிடம் மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா; மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம், 'குட்கா' பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; அவர்களுக்கு பல் சிதைவு, ஈறு நோய், பல் கறை போன்றவை உள்ளதா என சோதித்து பதில் தர வேண்டும். மேலும், மாணவ -மாணவியரிடம் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உள்ளதா என்றும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கேள்விகளால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சர்ச்சை வெளியானது.

பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
இந்நிலையில் பள்ளி மாணவியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் ஆரோக்கியம் மீதான அக்கறையின் காரணமாகவே மாதவிடாய் குறித்து கேள்வி கேட்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துளளது. பள்ளி மாணவியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் உடல் நலன் மீதான அக்கறை காரணமாகவும் மாதவிடாய் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுவதாகவும், இதில் சர்ச்சை என்றோ, தவறு என்றோ சுட்டிக்காட்ட எதுவுமில்லை என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. மேலும், மாணவியரிடம் ஆசிரியைகள்தான் மாதவிடாய் குறித்து கேள்விகளைக் கேட்டு, எமிஸ் தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications