தேவேந்திர குல வேளாளர் மக்களிடம்... எல்.முருகன் கபடநாடகத்தை தொடங்கியிருக்கிறார் -கே.எஸ்.அழகிரி
சென்னை: தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கபட நாடகத்தை தொடங்கியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் மக்களது உரிமைகளுக்காக பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பண்ணாடி, காலாடி, வாதிரியார், ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நீண்டகாலமாக முன்வைத்து வருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காங்கிரஸ் கோரிக்கை
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் நீண்ட நெடுங்காலமாக எழுப்பி வருகிறது. அந்த சமுதாயத்தோடு காங்கிரஸ் கட்சியின் உறவு என்பது பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.
காங்கிரஸ் முதல் குரல்
இன்று மட்டுமல்ல, நீண்ட நெடுங்காலமாகவே அவர்களது உரிமைகளுக்காக பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி விளங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் திரு. பீட்டர் அல்போன்ஸ் இதற்கான கோரிக்கையை முன்வைத்து உடனடியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்ற அன்றைய தமிழக முதல்வர் கலைஞர், உடனடியாக நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்து, இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டார்.
ஆட்சி மாற்றம்
நீதியரசர் ஜனார்த்தனன் உடனடியாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை சேர்ந்த பலதரப்பு அமைப்புகளை சந்தித்து, கலந்துபேசி, ஆதாரங்களை திரட்டி, ஆய்வு செய்து "கோரிக்கை நியாயமானது, அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம்" என்று பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பித்தார் . ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான அரசாணையை தமிழக அரசால் பிறப்பிக்க முடியவில்லை.
ஜெயலலிதா வாக்குறுதி
2011 மதுரை, அம்பாசமுத்திரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த 7 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் சமூகம் என அறிவிப்பேன்" என்று பகிரங்கமாக ஜெயலலிதா உறுதிமொழி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் முதலமைச்சராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டார்.
பாஜக மாநாடு
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றப் போவதாகக் கூறி 2012 இல் மதுரையில் பா.ஜ.க. மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 2015 ஆகஸ்ட் மாதம் அமித்ஷா தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 2015 செப்டம்பரில் தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளை புதுடெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவதற்கு ஏற்பாடு செய்தது.
அழகிரி குற்றச்சாட்டு
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க. தேவேந்திர குல வேளாளரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அரசியல் ஆதாயம் தேடுகிற போக்கிலேயே செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அந்த சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி அறிக்கை வெளியிட்டு கபட நாடகத்தை தொடங்கியிருக்கிறார். இதை அந்த சமுதாய மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஐ.ஏ.எஸ்.அதிகாரி குழு?
ஏற்கனவே நீதியரசர் பரிந்துரையை புறக்கணித்த அ.தி.மு.க. அரசு புதிதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கவேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் உணர்வுகளை அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து புண்படுத்தி, புறக்கணித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
சட்டமன்ற முற்றுகை சட்டமன்ற முற்றுகை
காங்கிரஸ் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவினரையும் ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்தமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படவேண்டிய முடிவினை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்கவேண்டும். அப்படி அறிவிக்கப்படவில்லையெனில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறபோது, எனது தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.