தமிழகத்தில் பி.இ, பிடெக், பிஆர்க் பொறியியல் படிக்க 1,99,213 பேர் விண்ணப்பம் - ஜூலை 27 கடைசி நாள்
தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்காக 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பிற்காக 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 27ம் தேதி ஆகும்.
தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாததை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு, சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவிகள்
அதன்படி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினத்தில் இருந்தே பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு எண்ணிக்கை உயரத் தொடங்கியது. அதற்கு முந்தைய நாட்கள் வரை தினமும் 1,000 பேர் பதிவு செய்து வந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 300க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நேற்றைய தினம் 3,800க்கும் மேற்பட்டோரும் விண்ணப்பப்பதிவு செய்திருக்கின்றனர்.

2 லட்சம் பேர் விண்ணப்பம்
அந்த வகையில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 1,99, 213 பேர் விண்ணப்பப்பதிவை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும், அதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கலந்தாய்வு எப்போது?
ஜூலை 27ஆம் தேதியன்று மாணவர்கள் விண்ணப்பம் செய்வது நிறைவந்த பின்னர் ரேண்டம் எண் வெளியிடப்படும். அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரி
இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பப்பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 27ம் தேதி ஆகும்.












Click it and Unblock the Notifications