காக்கிச்சட்டை போட ஆசையா?... தமிழக இளைஞர்களே தயாராகுங்கள் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு
தமிழக காவல் துறையில் புதிதாக 10ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காக்கிச்சட்டை போட ஆசைப்படும் இளைஞர்கள் அதற்கேற்ப தயாராக வேண்டும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். போலீஸ் என்றாலே கெத்துதான் என்று நினைக்கும் பல இளைஞர்களுக்கு காக்கிச்சட்டை போட வேண்டும் என்ற கனவில் இருப்பார்கள். அவர்களுக்காகவே விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
தமிழக காவல் துறையில் நிலவும் காவலர் பற்றாக்குறை காரணமாக கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. தேவையான காவலர்களை தேர்வு செய்வதற்காக அவ்வப்போது சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் காரணமாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. போட்டி தேர்வுகள் மூலம் காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழக காவல்துறை பணியிடங்கள்
கடந்த 2021 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி தமிழக காவல் துறைக்கு 1,33,198 காவலர்கள் தேவைப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டது. அப்போது பணியில் 1,18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதற்கிடையில், காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.

5.50 லட்சம் பேர் விண்ணப்பம்
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு 2020ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இப்பணிகளுக்காக 5.50 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 4.91 லட்சம்பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தள்ளிப்போன தேர்வு
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு,உடற்திறன் போட்டி ஆகியவை கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி
அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தமிழக காவல் துறையில் முறைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில், தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
அதே போல சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையில், தீயணைப்புத்துறையில் பணியாற்ற வேண்டும், காக்கிச்சட்டை போட ஆசைப்படும் இளைஞர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தமிழக இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications