திமுகவை வீழ்த்த டிடிவி தினகரன் கட்சியுடன் அதிமுக கூட்டணியா?.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர பதில்
சென்னை: தமிழகத்தில் திமுகவை தேர்தலில் வீழ்த்தும் வகையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு அதிரடியாக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
சென்னையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
தமிழ்நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது என திமுகவை விமர்சனம் செய்த ஜெயக்குமார், ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சட்டசபையில் அதிமுக வரிசையில் இருக்கை ஒதுக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவுக்கு கோரிக்கை வைத்தார்.
சட்டசபையில் ஓபிஎஸ் இடம்.. ஜால்ரா போடக்கூடாது.. சபாநாயகர் அப்பாவுக்கு பாயிண்டை கூறிய ஜெயக்குமார்
அமமுக குறித்து கேள்வி
இந்த வேளையில், ‛‛திமுகவை அழிக்கவேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், அதிமுக கட்சியோடு இணைய வாய்ப்பு இல்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளாரே?'' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்து கூறியதாவது:
இணையும் வாய்ப்பு இல்லை
‛‛ஏற்கனவே கட்சியின் சார்பில் எடப்பாடியாரே அதுபோல என்னைப் போன்றவர்களும் சரி எல்லோரும் ஒரு மித்த கருத்தை தெரிவித்துவிட்டோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பே இல்லை. வாய்ப்பு இல்லை எனும் போது அவர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.
மாறுபட்ட கருத்து இல்லை
என்னை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர் தேர்தலை சந்திக்கட்டும். இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. தமிழக மக்களாலும் சரி, அதிமுக கழகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் சசிகலா, டிடிவி தினகரன். அதுபோல தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட சக்தியும், பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் ஓபிஎஸ்.
மறந்து விட வேண்டும்
இத்தகைய சூழலில் அவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்ளட்டும். எங்களை பொறுத்தவரையில் அந்த பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவுடன் கூட்டணி என்பதை அவர்கள் மறந்துவிடவேண்டும். கூட்டணிக்குள் வர 100 சதவீதம் வாய்ப்பு இல்லை'' என்றார்.