துபாயிலிருந்து திரும்பிய விஜயகாந்த்.. உள்ளாட்சி தேர்தலில் ஒரு கை பார்ப்போம்னு ட்வீட்.. முரசு கொட்டுமா?
சென்னை: தேமுதிக தொடங்கி 16 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று முதல் 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என அதன் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி விஜயகாந்தால் தேமுதிக எனும் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே 2006 தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்தது.
அந்த தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வென்றிருந்தார். ஆனால் இந்த கட்சி பெற்ற வாக்குசதவீதமோ மற்ற இரு ஜாம்பவான் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிமுகவுடன் கூட்டணி
இதற்கு அடுத்து நடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்ட 29 இடங்களை பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் விஜயகாந்த். மேலும் தேமுதிக திமுகவை விட அதிக இடங்களில் வென்று வந்த குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார்.

ஜெயலலிதா- விஜயகாந்த் மோதல்
இதற்கு அடுத்து ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்ததை அடுத்து அந்த கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய சிறு கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் வந்த பிரதமர் மோடி, விஜயகாந்தை தனது நண்பன் என அழைத்தார். இந்த தேர்தலில் தேமுதிக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை.

8 எம்எல்ஏக்கள்
இதனிடையே தேமுதிகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது அவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 3 ஆவது இடத்தை பெற்றார். இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக அப்போதும் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

அதிமுகவுடன் மீண்டும் முறிவு
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தங்களை அழைத்து பேசும் என காத்திருந்த நிலையில் அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, தினகரனின் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் கள்ளக்குறிச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் களமிறங்கினார். ஆனால் டெபாசிட்டை இழந்துவிட்டார்.

தேமுதிக தோல்வி
இப்படியாக தேமுதிக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருவதற்கு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தின் தலையீடு கட்சியில் இல்லாமல் இருப்பது என தொண்டர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் தொடர்ந்து வெளிநாடுகளிலும் சென்னையிலும் விஜயகாந்துக்கு தைராய்டு, சிறுநீரக பிரச்சினை ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் துபாயில் பேச்சு பயிற்சிக்காக சென்றிருந்த விஜயகாந்த் சிகிச்சை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

விஜயகாந்த் தலையீடு
இதனால் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்தின் தலையீடு இருந்து கட்சி வளர்ச்சியை பெறும் என தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் தேமுதிக தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 17 ஆம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது. இதுகுறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

16 ஆண்டுகள் முடிவு
அந்த ட்வீட்டில் அவர் தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2021 அன்று 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலில், அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார். இதை பார்த்த தொண்டர்கள் உற்சாகமடைந்து பழைய பன்னீர்செல்வமாக மீண்டும் வாருங்கள் கேப்டன் என அழைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications