கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே மாநில தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது.. கடைசி நாளான இன்று மட்டும் மாநிலம் முழுக்க சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி உள்ளது. இது போக சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோரின் கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாடு தேர்தல்
தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள சூழலில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுக்க சூறாவளி பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது என்றே சொல்லலாம்.
வேட்புமனு
இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்கள் கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கால அவகாசம் தொடங்கிய நிலையில், இன்றோடு அது நிறைவடைந்தது. இன்றைய தினம் எடப்பாடி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப்பாகக் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் இன்றே வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பாஜக வேட்பாளர்கள்
இன்றைய தினம் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு நிகழ்வில், மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பங்கேற்றனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றார். அதேபோல அவினாசி தொகுதியில் எல் முருகன் வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் அமைச்சர் கிஷண் ரெட்டி பங்கேற்றார்.
இதுபோல மாநிலம் முழுக்க பல்வேறு தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 30ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று மட்டும் 2000 பேர் வேட்புமனு தாக்கல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுமார் 4500க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யக் கடைசி நாளாக உள்ள சூழலில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளைய தினம் நடைபெறுகிறது. அதில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றாத மனுக்கள், முறையாக நிரப்பப்படாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.
தேர்தல் களம்
அதன் பிறகு வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதாக இருந்தால் பெறலாம். அதுபோல வேட்பாளர்களைத் திரும்பப் பெற வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் இந்த முறையும் வழக்கம் போல ஒரே கட்டமாகவே சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 23ம் தேதி மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 4 மாநில தேர்தல் முடிவுகளோடு, வரும் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications