சுட்டெரிக்கும் வெயில்...தமிழகத்தில் 100டிகிரியை தாண்டிய வெப்பம் - மும்பை, தானேவில் அனல் காற்று
பங்குனி வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை: கோடை காலம் ஆரம்பித்து விட்டது. பங்குனி மாத வெயில் தமிழகம் முழுவதும் சுட்டெரிப்பதால்
மதுரை, ஈரோடு, வேலூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. வட மாநிலங்களில் அனல்காற்று வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் மாலை நேரங்களில் நிலவுகிறது.

சுட்டெரிக்கும் கோடை வெப்பம்
தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். கடந்த ஆண்டு இரண்டு மழைக்காலங்களிலும் அபரிதமாக மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி வரை பனி காலமாக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் வெயில் தன் கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. காலை நேரத்திலேயே சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பிற்பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.

100 டிகிரி ஃபாரன்ஹீட்
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெப்பநிலை அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. மதுரை, ஈரோடு, வேலூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் வெப்பநிலை 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 39.5 செல்சியஸ் அதாவது 103.1 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.

வறண்ட வானிலை
16.03.2022, முதல் 18.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் 19ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான,மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிக்கும்
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் அனல் காற்று
வட மாநிலங்களில் குறிப்பாக மும்பை, தானேவில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. அங்கு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருவதால் புழுக்கம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது அனல்காற்றும் வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
இதனிடையே மும்பை, தானேவில் இன்றும் நாளையும் அனல்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு கொங்கனில் இரண்டு நாட்கள் அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதிவரைக்குமே இந்த ஆண்டு வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications