சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் காலை 5 மணிவரை.. வண்டியோடு வெளியே வராதீர்கள்.. அதிரடி உத்தரவு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை ஏற்கனவே, புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடக்கூடாது என்றும், கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களில் வானங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்றும் ஏற்கனவே சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. 31.12.2021 அன்று இரவு காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய கட்டுபாடாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் நாளை இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மெரினா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்ன மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications