மனநலம் பாதிக்கப்பட்டவரை அசிங்கப்படுத்தி வீடியோ.. வம்பில் சிக்கிய பெண் போலீஸ்.. சாட்டையை சுழற்றிய ஐஜி
சென்னை : பைக் திருட்டு குறித்து சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரிக்கும் போது செய்தி வாசிப்பாளர் போல அடுக்கு மொழியில் பேச வைத்து வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென் மண்டல காவல்துறை ஐஜி அன்பு உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தின் அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டில் திருட முயன்றாக நபர் ஒருவரை பிடித்த அப்பகுதிமக்கள், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் அந்த காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளரான மதனகலா விசாரணை நடத்தினார். அதில், சிக்கியவர் மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா நடந்தது குறித்து ராதாகிருஷ்ணனிடம் விளக்குமாறு கூறினார். இதையடுத்து செய்தி வாசிப்பாளர் போலவும் மேடையில் பேசும் அரசியல்வாதி போலவும் பேசிய ராதாகிருஷ்ணன் தூய தமிழில் கவிதைகள், ஆங்கிலத்தில் வார்த்தைகள் கலந்து வாக்குமூலம் அளித்தார். இதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் சிரித்ததும் அவர் பேசியது குறித்து கமென்ட் அடித்ததும் பதிவாகி இருந்தது.

விசாரணை வீடியோ
மேலும் அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் பைக் திருட்டு குறித்து சிக்கியவரிடம் நடத்திய விசாரணையில் அதை வீடியோ எடுத்து போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ராதாகிருஷ்ணன் குறித்து விசாரித்தபோது அவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் எனவும் மனநல காப்பகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பதும் தெரியவந்தது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்
சாவியுடன் யாராவது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து இருந்தால் அவற்றை எடுத்து ஓட்டுவது, பெட்ரோல் தீர்ந்து போனாதும் அங்கேயே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் ரமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார்.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் அத்துமீறி அசிங்கப்படுத்திய காவல் ஆய்வாளர் மதன கலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென் மண்டல காவல்துறை ஐஜி அன்பு அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பில் இருந்து மதனகலா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அத்துமீறிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து உள்ளது.












Click it and Unblock the Notifications