ரூல்ஸ் போட்டது சரி.. ”இது ரொம்ப முக்கியம்”.. போலீசாருக்கு பாதுகாப்பு தேவை - பாஜக நாராயணன் கோரிக்கை!
சென்னை : போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படுவது, வசூலிப்பது போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாகன பதிவு தொடங்கி லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாவிட்டால், வேகமாக ஓட்டினால், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் என அனைத்து தவறுகளுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அபராத தொகையை அதிகரித்தது வரவேற்கத்தக்கது என்றும், அபராதங்களை விதிக்கும் அதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பாஜக நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

வரவேற்கிறது பாஜக
இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2019ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் மத்திய அரசின் பரிந்துரையின்படி, இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வந்திருப்பது சிறப்பு. கட்டுப்பாடில்லாமல் பன்மடங்கு பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால், இந்த மாற்றங்களை முறையாக அமல்படுத்துவதில் தமிழக காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.

செல்வாக்கை காட்டுவார்கள்
பல மடங்கு அபராதம் என்பதால் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் பதட்டமடைந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி காவலர்களை அடிபணியச் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் இந்த அபராதங்களை விதிக்கும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதோடு, அந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

வெளிப்படைத்தன்மை வேண்டும்
அதே வேளையில், நிலைமையை தங்களுக்கு சாதாகமாக்கி கொண்டு சமரச முயற்சி என்ற பெயரில், அந்த அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். லஞ்சம் பெறும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். விதி மீறல்கள் மற்றும் அபராதம் விதிக்கப்படுவது, வசூலிப்பது போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும்.

அரசின் கடமை
குறிப்பாக ஒரு வழிப்பாதைகளில் எதிர் திசையில் வாகனம் செலுத்துவோரை கண்டித்து அதிக தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். சில அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை புறந்தள்ளி மக்கள் நலன் கருதி உறுதியான, வெளிப்படையான தன்மையோடு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications