வெட்டி மெரினாவில் வீசுவேன்.. அலறவிட்ட ஆடியோ விவகாரம்.. சூர்யா சிவா- டெய்சியிடம் பாஜக விசாரணை
சென்னை: ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இன்றைய தினம் திருப்பூரில் பாஜக அலுவலகத்தில் ஆஜராகி திருச்சி சூர்யாவும், டெய்சி சரணும் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக ஒரே பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கும் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆடியோவாக பொதுவெளியில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவை திமுகவும் கூட்டணி கட்சிகளும் வைரலாக்கி கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த ஆடியோவில் டெய்சி சரணை மிகவும் மோசமான வார்த்தைகளால் திருச்சி சூர்யா சிவா விமர்சித்துள்ளார்.
பாஜக காயத்ரிக்கு ஒரு நீதி! திருச்சி சூர்யா சிவாவுக்கு ஒரு நீதியா? மக்கள் நீதி மய்யம் கடும் விமர்சனம்
மெரினாவில் வீசுவேன்
அத்துடன் ஒரு பெண்ணை அடுத்த ஆண்டுக்குள் கொன்று மெரினாவில் வீசுவேன் என திருச்சி சூர்யா சிவா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். டெய்சி சரணை மிகவும் ஆபாசமாக அவதூறாகவும் பேசியது உள்கட்சி பிரச்சினை என்றாலும் கூட கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரை இதுவரை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கையை வெட்டுவேன்
பெண்களை யாராவது அவதூறாக பேசினால் கையை வெட்டுவோம் என திமுக சைதை சாதிக் பேசும் போது கொதித்த அண்ணாமலை தற்போது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சைதை சாதிக்கிற்கு எதிராக பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் சைதை சாதிக்கை விட திருச்சி சூர்யா சிவா மிகவும் மோசமாக பேசியுள்ளதாக பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா சிவா
மேலும் பெண்ணை இத்தனை இழிவாக பேசிய திருச்சி சூர்யா சிவா கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அது போல் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி, பெண்களை தவறாக பேசினால் கையை வெட்டுவேன் என்பதுதானே உங்கள் கொள்கை முழக்கம். பெண்களை தவறாக பேசிய திருச்சி சூர்யா என்கிற குற்றவாளியின் கையை வெட்ட வேண்டாம். கட்சியில் இருந்தாவது நீக்குவீர்களா அண்ணாமலை அவர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.
கே டி ராகவன்
அது போல் கே.டி. ராகவன் விவகாரத்தில் அமைக்கப்பட்ட பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தலைமையிலான குழு என்னவானது, அதன் அறிக்கை என்னவானது என்றும் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாஜக-வில் பெண்களின் பாதுகாப்பும்,ஜனநாயகமும் பல் இளித்து, சந்தி சிரிக்குது! பெண் உறுப்பை வெட்டி வீசுவேன், கொலை செய்வேன் என மிரட்டிய குற்றவாளிக்கு சூரியாவுக்கு விசாரனை கமிட்டி...!! அதனை தட்டி கேட்ட பெண் காயத்திரி கட்சியை விட்டு நீக்கம் என ராஜீவ் காந்தி அடுத்த ட்வீட்டில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 நாட்களுக்கு முன்
இந்த புகார் தொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலைக்கு தெரிந்த போதிலும் அவர் நடவடிக்கை எடுக்காமல் டெய்சி சரணை சமாதானப்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது போல் வழக்கறிஞரும் நடிகையுமான கஸ்தூரியும் தனது ட்விட்டரில் பொங்கியுள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: டெய்சி சரணை திருச்சி சூர்யா அத்தனை ஆபாசமாக பேசி அவர் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் காயத்ரி ரகுராம் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களை தண்டிப்பதுதான் உங்கள் அரசியல் என்றால் அதைவிட மானம் கெட்ட பிழைப்பு உலகில் இல்லை என கஸ்தூரி சங்கர் ட்வீட் போட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஆஜர்
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் டெய்சி சரணும் திருச்சி சூர்யா சிவாவும் ஆஜராகியுள்ளனர். அவர்களிடையே பாஜக மாநில செயலாளர் மலர்க்கொடி, கனகசபாபதி ஆகியோர் விளக்கம் கேட்டு வருகிறார்கள். எனவே இது தொடர்பான அறிக்கை எப்போது வெளியாகும் என தெரியவில்லை. ஒரு வேளை திருச்சூ சூர்யா சிவா பேசியது உண்மையாக இருந்தால் அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.