அம்மா மறைந்த நன்னாளில்.. இபிஎஸ் யார்னு தெரிஞ்சு போச்சு! ஆனாலும் கூட்டணி ஓகே! தடாலடி டிடிவி தினகரன்!
சென்னை : அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை ஆனால் அதிமுக - அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் என்ன நடந்தாலும் இறுதிவரை போராடி தனக்கான இடத்தை பெற்றே தீருவேன் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்க்க மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
திமுகவை வீழ்த்த வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் சேர வேண்டும் என பாஜக தலைமை விரும்பும் நிலையில் எடப்பாடியுடன் சேர முடியாது என அதிரடி காட்டிய டிடிவி தினகரன் மீண்டும் கூறி இருக்கிறார். ஆனால் கூட்டணிக்கு மட்டும் ஓகே சொல்லி இருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த டிடிவி தினகரன், அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைக்க தயார் என கூறி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிமுக - அமமுக கூட்டணி
இந்நிலையில், அதிமுக - அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்," அம்மா மறைந்த நன்நாளில் என்று உறுதி மொழி ஏற்றதில் இருந்தே அவர்களது மனநிலை தெரிகிறது. அவர்கள் யார் என்பது அம்மா நினைவு நாளில் வெளிப்பட்டுள்ளது

திமுகவை வீழ்த்த வேண்டும்
ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அழைப்பிதழ் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் கேட்க வேண்டும். தான் அமமுக பொதுச் செயலாளர், இன்னொரு கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன். அதிமுகவில் உள்ளவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டேன்.

இணைவதற்கு வாய்ப்பு இல்லை
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கூட்டணிக்கு செல்வீர்களா என்பது காலத்தின் கட்டாயம். கூட்டணிக்கு யார் தலைமை என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முதலில் அவர் நிதானமாக உள்ளாரா என்பதனை பரிசோதிக்க வேண்டு. அமமுகவில் காலியாக உள்ள தலைவர் பதவி அடுத்த ஆண்டு கட்சி ரீதியான தேர்தல் வைக்கப்படும் அதன் மூலம் அந்த இடம் நிரப்பப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications