2024 தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி..? - நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் கொடுத்த சிக்னல்!
சென்னை : 2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில குறிப்புகளை உணர்த்தியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக எந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2 கட்சிகள்
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றிப் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "இரண்டு தேசியக் கட்சிகள் இருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகள் தேசியக் கட்சியாக இருந்தாலும் அவர்கள் எல்லா மாநிலத்திலும் வலுவாக இல்லை. எனவே, இரண்டு தேசியக் கட்சிகளின் தலைமையில்தான், அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கிற போட்டி இருக்கும். ஒன்று பாஜக கூட்டணி, இன்னொன்று காங்கிரஸ் கூட்டணி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும்.

காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால், அதிலும் நாம் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அமமுக ஒரு மாநிலக் கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து நின்று எந்தப் பயனும் இல்லை. நாம் பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால், இந்தியாவின் பிரதமரை உருவாக்குவதில் அணில் போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும்.

பாஜக உடன் கூட்டணி
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளில், ஒரு கட்சியுடன்தான் நாம் கூட்டணி அமைப்போம். அது உறுதி. எனவே, தேர்தலை நோக்கி நீங்கள் அனைவரும் செயல்படுங்கள்." என்று பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். இதன் மூலம், அமமுக, பாஜக அல்லது காங்கிரஸ் உடன் நிச்சயம் கூட்டணி அமையும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

காசு கொடுத்து வாங்கும் நிலை
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மேலும் பேசிய டிடிவி தினகரன், 'தேர்தல் வெற்றி தோல்வி என்னை பாதித்தது இல்லை. வருங்காலத்தில் அமமுக தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது. பதவி வெறி, சுயநலம் கொண்டவர்களிடம் உள்ளது அக்கட்சி. அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கியுள்ளது. சொந்த கட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது.

கூலிக்கு வேலை செய்யும் கூட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு 90 சதவீத ஆதரவு உள்ளது என்றால் வாக்குப் பெட்டியை வைத்து தேர்தல் நடத்த வேண்டியது தானே. அதிமுகவில் வகித்த பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் 5 ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற படை நம்மிடம் உள்ளது. அங்கே இருப்பது கூலியை எதிர்பார்த்து வேலை செய்யும் கூட்டம்.

திருந்தவில்லை
தன் பதவியை பறித்துவிட்டார்கள் என்ற கோபத்தில் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். பிற்காலத்தில் தன் தவறை உணர்ந்து மாறிவிட்டார் ஓபிஎஸ். ஆனால் பழனிசாமி மேலும் மேலும் தவறு செய்கிறார். துரோகம் செய்து கொண்டே இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வர எடப்பாடி பழனிசாமியே காரணம். அவர் திருந்த வாய்ப்பே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications