அதிமுகவுக்கு தாவிய நிர்வாகிகள்.. உடனே ‘அதிரடி’ காட்டிய டிடிவி தினகரன்! எடப்பாடிக்கு 300 கோடி செலவு?
சென்னை : விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நிலையில், அமமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக விழுப்புரம் வடக்கு விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குரிய சட்டமன்றத் தொகுதிகளை அமமுக தலைமை அறிவித்துள்ளது.
எங்கள் கட்சியிலிருந்து யாராவது ஒரு நிர்வாகியை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பிடித்தார்கள் என்றால் அடுத்த நாளே அவரை விடத் திறமையாகவோ அவருக்குச் சமமாகவோ நிர்வாகிகளை நியமித்துவிடுவோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமமுக அறிவிப்பு
இதுதொடர்பாக அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விழுப்புரம் வடக்கு மற்றும் விழுப்புரம் கிழக்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்டத்தின் நிர்வாக வசதிகளுக்காக விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்குண்டான சட்டமன்றத் தொகுதிகளை கீழ்காணுமாறு உள்ளடக்கி செயல்படும்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
1. செஞ்சி சட்டமன்றத் தொகுதி 2. மயிலம் சட்டமன்றத் தொகுதி
விழுப்புரம் கிழக்கு மாவட்டம்
1. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி 2. வானூர் சட்டமன்றத் தொகுதி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
1. திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி 2. விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி

மாவட்ட செயலாளர்கள்
விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக E.குமரன் (ஓலக்கூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்)
விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக P.கோவிந்தராஜ் (விழுப்புரம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்)
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளராக M.D.முத்து (விழுப்புரம் வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பொறுப்பில்
மேலும், கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 கோடி ரூபாய்
அமமுக மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு அதிமுகவில் இணைந்தது பற்றிப் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆட்களைப் பிடிப்பதற்கே 200 முதல் 300 கோடி ரூபாய் பணத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் செலவிட்டுள்ளனர். கட்சியில் எல்லாம் பிரச்சனை இல்லை. கட்சியிலிருந்து யாராவது ஒரு நிர்வாகியை பழனிசாமி தரப்பினர் பிடித்தார்கள் என்றால் அடுத்த நாளே அவரை விடத் திறமையாகவோ அவருக்குச் சமமாகவோ நிர்வாகிகளை நியமித்துவிடுவோம். அது பெரிதாக எங்களைப் பாதிக்காது. இரண்டு நாட்களுக்குச் செய்தியாக இருக்கும் அவ்வளவுதான். அமமுக அமைப்பு தமிழகம் முழுவதும் இருப்பதால்தான் பழனிசாமி எங்களிடமிருந்து ஆட்களைப் பிடுங்கிக் கொள்கிறார்." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications