சென்னையில் அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம்.. தமிழக அரசை வறுத்தெடுத்த டி.டி.வி தினகரன்!
சென்னை: சென்னையில் பெரியார் ஈ.வே.ரா சாலையை தொடர்ந்து தற்போது அண்ணா, காமராஜர் சாலையின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதற்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் சாலை பெயர் மாற்றம்
சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கி.மீ. நீளமுள்ள பிரதான சாலை பூத்தமல்லி ஹை ரோடு என்றும், பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணா, காமராஜர் சாலை பெயரும் மாற்றம்
இந்த பெயர் மாற்றத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் இருந்த சாலைகளின் பெயரை மாற்றி தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

டி.டி.வி தினகரன் கண்டனம்
தமிழக அரசின் இந்த செயலுக்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:- சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

நடவடிக்கை வேண்டும்
வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications